12.11.2020

 பழந்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் 


 விளாந்தர் /ஒளிக்கூண்டு  (அரிக்கன் விளக்கு )


  காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக்கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு .


அம்மி 


  குழவி கொண்டு மிளகாய் , தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல் .


அண்டா 


  அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம் .


அடுக்குப்பானை 


 ஒன்றன் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை ) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு . இதில் உப்பு , புளி , தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர் .


அடிகுழாய் 


கைபிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்த்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய் .


ஆட்டுக்கல் 


வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும் குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம் .


விரல் உறை 


தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை .


ஒட்டியாணம் 

  

  பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப்பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம் .


எந்திரம் 


( அரிசி ,உழுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ ,உடைக்கவோ பயன்படுத்தப்படும் ) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முனையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம் .இதைத் திரிகல் , திரிகை ,இயந்திரம் என்றும் கூறுவர் .


உரல் 


  வட்டவடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களை குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம் 


உரி 


பால், வெண்ணை , தயிர் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும் , உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு .


குஞ்சம் - குஞ்சலம் 


பெண்களின் சடையில் இனைத்துத் தொங்கவிடப்படும் , கயிற்றால் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள் .


குடுவை 


குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயனப்டுத்தும் , புடைத்த நடுப்பகுதியும் , சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற முடியும் கொண்ட கலன் .


கோகர்ணம் 


ரசம்,மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில் , ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம் .


கொடியடுப்பு 


ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு .


சுளகு 


வாய்ப்பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட ஒரு சாதனம் . தானியங்களை புடைப்பதற்கு பயன்படும் முறத்தைவிடச் சற்று நீளமான ஒரு கருவி 


தாவணி 


இளம் பெண்கள் அணியும் , ஒரு சுற்றி வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நிலைத்திருக்கும் குறைவான ஆடை 


தொடி 


பெண்கள் தோளை அடுத்த கைப்பகுதியில் அணிந்துகொள்ளும் , பிடித்தாற்போல் இருக்கும் அணிவகை 


நடைவண்டி 


குழந்தை நடைபழகுவதற்காக , நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மார்ச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விலையாட்டுச் சாதனம் .


பஞ்சமுகவாத்தியம்


கோயில்களில் பூஜையின் பொது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதற்கான பெரிய குடம் போன்ற ஒரு தாளவாத்யக் கருவி .


பாக்குவெட்டி 


சற்றுத் தட்டையான அடிப்பகுதியும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியும் கொண்ட சாதனம் . பாக்கு வெட்டுவதற்கு பயன்படும் .


பிரிமணை 


பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வாகையில் அவற்றின் அடியில் வைக்கும் பிரிகளைக் (வைக்கோல் ) கொண்டு வளையும் வளையம் போல் பின்னப்பட்ட சாதனம் .


புல்லாக்கு 


மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணிகலன் .


முறம் 


தானியங்களை புடைப்பதற்கு பயன்படும் நுனிப் பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம் .


லோட்டா 


நீர் குடிப்பதற்கான நீள உருண்டை வடிவக் குவளை 


மரப்பாச்சி 


பெண் குழந்தைகளுக்கான மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை .


இந்த பொருள்கள் எல்லாம் புழக்கத்தில் இல்லை என்ற கூறலாம் . அவற்றை எல்லாம் சேமித்து பாதுகாத்து அடுத்தடுத்து தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம் .


நன்றி !

12.05.2020

 

குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள 96 வகை மலர்கள் !


குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்பட்டுள்ள 96 வகை மலர்கள் :

அரும்பு , அதிரல் , ஆம்பல் , அவரை . அனிச்சம் ,ஆத்தி ,ஆரம் , ஆவிரை ,இருள்நாளி ,இலவம் , ஈங்கை ,உந்தூழ் ,எருவை , எறுழம் , கண்ணி , கரந்தை , கருவிளை ,காஞ்சி , காந்தள் ,காயா,காழ்வை , குடசம் , குரலி , குரவம் , குருக்கத்தி , குருகிலை , குறுந்தம் , குவளை , குளவி , குறிஞ்சி , கூவிரம் , கூவிளம் ,கைதை ,கொகுடி , கொன்றை , கோங்கம் , கோடல் , சண்பகம் , சிந்து , சுள்ளி , சூரல் ,செங்கோடுவேரி ,செம்மல் ,செருந்தி , செருவிளை , சேடல் , ஞாழல் , தணக்கம் , தளவம் ,தாமரை , தாழை , தில்லை, திலகம் , தும்பை ,துழாய் , தோன்றி , நந்தி , நரந்தம் , நறவம் , நாகம், புன்னாகம் , நெய்தல் , நறு நெய்தல் , பகன்றை , பசும்பிடி ,, பயினி ,பலாசம் , பாங்கர் ,பாதிரி , பாரம் , பாலை , பிடவம் , பிண்டி , பித்திகம் , பீரம் , புண்ணை , பூளை , போங்கம் , மணிச்சிகை , மராஅம , மருதம் , மா , மாரோடம் ,முல்லை , கல்வர்முல்லை , மௌவல் , வகுளம் ,வஞ்சி , வடவனம் , வழை ,வள்ளி , வாகை , வாரம் , வாழை , வானி ,வெட்சி , வேங்கை ,வேரல் , வேரி என்பன ..

நன்றி !

12.01.2020

 

                           புழுக்கம் ..!

 

      ஒரே புழுக்கமா இருக்கே … குளிக்கலாமா என்று நினைத்துக்கொண்டே துண்டை கையிலெடுத்தேன்  , அப்போது இண்டர்காம் சிணுங்கியது . யாரு இந்நேரத்துல என்று நினைத்தபடியே ரிசீவரை எடுத்தேன் . 'ஹலோ ...  நான் முடிக்கும் முன்

 'சார் ,நா செல்வா ஹோட்டல் ரெசெப்க்ஷனிஸ்ட் பேசறேன் '.

'எஸ் '... என்றேன்

'சார் யாரோ கலைவாணியாம் ,லைன்ல இருக்காங்க ,ஒங்க கூட பேசணுமாம் ,லைன் குடுக்கட்டுமா ...?

'ம்ம்ம் …'

'சார் நா கலை பேசறேன் .. சாரி டு டிஸ்டர்ப் யு . ஒங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும் . ப்ரியா இருக்கீங்களா ? எப்ப வரலாம் …'

'என்னாச்சு …'

'சும்மாத்தான் … எனக்கு மனசே சரியில்லை அதான் … இழுத்தாள் .

' ம்ம்ம் ...  சரி வாங்க … இப்ப எங்க இருக்கீங்க ?'

'வடவள்ளி ..'

'ஓகே..வாங்க . நா ரூம்ல தா இருக்கேன் .. .வாங்க .'

           போனை வைத்துவிட்டாள். உற்சாகமாய் குளிக்கப்போனேன் . என் உள்மனம் இரண்டாக பிரிந்து கிடந்தது .'அவ நல்லப்பொண்ணு , ஏதோ மனக்கஷ்டத்துல இருக்கா அதான் ஆறுதல் தேடி ஒங்கிட்ட பேச வர்றா . தேவையில்லாதத மனசுல நெனச்சுக்கிட்டு திரியாதே என்று ஒரு மனம் சொன்னது . 'அட போடா …கஷ்டமாவுது ஒன்னாவுது ..சான்ஸ் கெடச்சா யூஸ் பண்ணிக்கோ ,போனா திரும்ப வராது, கெடச்ச வாய்ப்ப சரியா யூஸ்பண்ணிக்கோ என்று வழக்கு பேசியது இன்னொரு மனது .

            ஒரு வழியாக நான் குளித்து தயாராகியிருந்தேன் . எனக்கு மிகவும் பிடித்த அந்த பாடிஸ்பிரேவை கொஞ்சம் தூக்கலாகவே அடித்துக்கொண்டேன்.  என்னாச்சு எனக்கு ,நான் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறேன்  ? மனசு ஏன் என்னென்னமோ நெனைக்கிது ? ,என்னை நானே குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக்கொண்டேன் . ஏதோ ஒரு அழுத்தமான அதே நேரத்தில் தவறான எதிர்பார்போடுதான் நான் காத்திருந்தேன் அவளின் வருகைக்காக .

           ஒரு நாற்பது நாற்பத்தைந்து நிமிஷங்கள் கரைந்திருந்தது.  குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன் ,பாடிஸ்பிரேயை மீண்டும் ஒரு முறை நுகர்ந்து  பார்த்தேன் . அழைப்பு மணி ஒலிக்க எழுந்து கதவை  திறந்தேன். உள்மனமோ 'அடங்குடா அதிகப்பிரசங்கி 'என்று சொன்னது .

'வாங்க வாணி ' என்றேன் உதட்டோர புன்னகையோடு . நான் எப்போதும் அவளை அப்படித்தான் அழைப்பேன் . எல்லாரும் என்ன 'கலை' னு தான் கூப்புடுறாங்க , நீங்க ஒருத்தர் தான் வாணி னு கூப்புடுறீங்க , ஆனாலும் எனக்கு புடிச்சிருக்கு என்பாள் .

        அவள் உள்ளே நுழைந்து என்னைக்கடந்த போது  லேசான சுகந்தம் என்நாசியை  படர அவள் கண்ணிலும் கிளர்ச்சி ,  காரணமில்லாமல் என் மனத்திலும் ஒரு கிளர்ச்சி .  சேலையில் இருந்த அவள் தன் சுருண்ட கூந்தலின் கற்றை முடியை   முன் நெற்றியில் அலைய  அனுமதி கொடுத்திருந்தாள். மனம் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

ஒருவாறாக  சமாளித்துக்கொண்டு நிகழ்காலத்திற்கு வந்தேன் . எதிரில் இருந்த சோபாவை காட்டினேன் . கருப்பாய் இருந்தாலும் ரொம்ப கலையாய் படுஅழகாய் இருக்கிறாளே … மீண்டும் மனம் தாவ ஆரம்பித்தது .

 'என்ன சாப்புடுறீங்க ?' சம்பிரதாமாய் கேட்டேன் .

'ஒன்னும் வேணாம் சார் '

'நோ பார்மாலிட்டீஸ் … பீல் பிரீ என்றேன் உதட்டோர புன்னகையோடு .

'ஒரு பில்டர் காபி கெடைக்குமா?'

' வோ சுயூர்' . ஆர்டர் செய்தேன் சந்தோஷமாய் . ரொம்ப வழியாதே என்று உள்மனம் எச்சரிக்கை செய்தது .

'சார் ஒங்க பாடிஸ்பிரே  வாசன ரொம்ப சூப்பரா இருக்கு .என்ன பிராண்டு சார் ?'

' அப்பிடியா … எனக்கு ரொம்ப புடிச்ச பிராண்டு .பேர் சொன்னா நீங்க தப்பா நெனைக்ககூடாது...' பீடிகையோடு நிறுத்தினேன் .

'தப்பா நெனைக்க இதுல என்ன இருக்கு . சொல்லுங்க ' என்றாள்.

'காமசூத்ரா பாடிஸ்பிரே '

'சார் அப்பிடி ஒரு பிராண்டு இருக்கா ? . ஆச்சர்யத்தில் அவளின் பெரிய விழிகள் விரிந்தன  . உங்களுக்கு என்னென்னமோ தெரிஞ்சிருக்கு .'

இவள் என்ன ஆச்சர்யப்படுகிறாளா ? இல்ல தெரியாததுபோல் நடிக்கிறாளா ? எனக்கு நானே கேட்டுக்கொண்டேன் .

'காபி வந்திருந்தது . ஒரு சிப் சுவைத்துவிட்டு கீழேவைத்தவள் 'சூப்பர் சார் '  தேங்க்ஸ்  என்றாள் .

'ம்ம் ….  வீட்டுல எல்லாரும் சௌக்கியமா ?'  என்ன பேசுவதென்று தெரியாமல் ஏதோ உளறி வைத்தேன் .

'ஆல் ஓகே சார் ' ஆர்வமில்லாமல் பதில் சொன்னாள் .

'எப்படி வந்தீங்க ' …. மீண்டும் உளறிக்கொட்டினேன் .

'டாக்ஸில வந்தேன் ' ….

'ம்ம் ..சொல்லுங்க மேடம் ..

'சார் ப்ளீஸ் டோன்ட் கால் மீ மேடம் , எனக்கு அது புடிக்கல .ப்ளீஸ் கலைன்னு கூப்புட்டுங்க இல்லன்னா வாணின்னு கூப்புடுங்க' என்று கண்டிப்புடன் சொன்னவள் , ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தவள் சுரத்தை இல்லாமல் பேச ஆரம்பித்தாள் .

'எனக்கு மனசே சரி இல்ல சார் . கொஞ்ச நாளா எனக்கு எதிலும் இன்ட்ரெஸ்ட் இல்ல . மனசு எதிலும் யாரோடயும்  ஓட்டறதில்ல . பைத்தியம் புடிச்சிடும் போலிருக்கு… ' என்று நிறுத்தினாள் .

          மீதமிருந்த காபியை ஒரே சிப்பில் உறிஞ்சிவிட்டு கப்பை கீழே வைத்தவள் ,அருகில் இருந்த காகித தாளால் உதட்டை ஒற்றிக்கொண்டாள் . உதட்டு சாயம் கொஞ்சமாக அதில் குடியேறியிருந்தது .  மேலும்  அவளே  தொடர்ந்தாள் 'வீட்டுக்கு போனா மாமியார் ,மாமனார் நொய்யி நொய்யினு … ‘ ஏதாவுது குத்தம் கண்டுபுடிச்சி பேசிட்டே இருக்காங்க . ஒரே எரிச்சலா இருக்கு '.

        'ஆபிசுக்குப் போனா அந்த ஓனரோட பையன் யுவன் தொல்லை . எப்ப பாத்தாலும் ஒரே ஜொள்ளு . காரணமே இல்லாம வந்து வழியறதே வேலையா வச்சிருக்கான் ராஸ்க்கல் ' என்றால் கடுங்கோபமாக . அந்த ஜேசுராஜ் தொல்ல வேற  . .பக்கத்து ஸீட்டுலயே ஒக்காந்துக்கிட்டு பல்லைளிச்சிகிட்டு என்னையே பாத்துகிட்டு நிக்கிது . அப்பன் வயசுல இருந்துகிட்டு இப்பிடி நடக்கிறமேன்னு கொஞ்சம்கூட அறிவில்ல . அந்த ஆளோட பேச்சு பார்வை எதுவுமே சரில்ல.  எனக்கு அங்க யாரை பாத்தாலும் கோவம் கோவமா வருது …' நீண்ட வெறுப்பு பத்திரம் வாசித்து நிறுத்தியிருந்தாள்.

அவள் அழகில் மயங்கி போயிருந்த நான் சுதாரித்துக்கொண்டு 'அப்பொறம் ? ' என்றேன் .

அவளுக்கு கோவம் வந்துவிட்டது .'நா என்ன கதையா சொல்றேன் . அப்புறமுனு கேக்கிறீங்க '..

'இல்ல மா முடிஞ்சுதா இல்ல இன்னும் இருக்கான்னு கேட்டேன் ' என்றேன் .

'அவ்ளோதான் ' என்றாள், குரலில்  சின்ன ஏமாற்றம் தெரிந்தது .

'சரி ஒங்க பிரச்சினை என்னான்னு எனக்கு புரிஞ்சிடிச்சி . உங்க பிரச்சினைக்கு நா  என்ன பண்ணமுடியும் ? கேள்வியோடு அவள் முகத்தை எதிர்கொண்டேன் .

'சார் என்ன வெறுப்பேத்தாதிங்க … ' என்று ஒற்றை வரியில் சூள் கொட்டினாள். சற்று நேரம் எங்களுக்கிடையே மௌனம் நிலவியது .

             எனக்கு புரிந்துவிட்டது அவளின் பிரச்சினை என்னவென்று . அவளோ இருபதுகளின் மத்தியில் இருப்பவள் , சாதி விட்டு சாதி மாறி காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டவள்   , அவள் வீட்டில் எதிர்ப்பு வேறு  ,கணவன் வெளிநாட்டில்  இருக்கிறான்  , இவளுக்கு இன்னும் விசா கிடைத்தபாடில்லை , மாமியார் , மாமனார் நச்சு வேறு , ஆஃபிஸில் ஜொள்ளர்கள் அதிகம் , சிலர் அவ்வப்போது எல்லைமீறுவதும் உண்டு . எப்படி எல்லாமாய் சேர்ந்து அவளை அவளது மனதை பாடாய்படுத்துகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது . எல்லாவற்றிற்கும் மேலாக வயதும் தனிமையும் அவளை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது  .

'நா சொல்றது புரியுதா உங்களுக்கு ? உங்கள ஒரு நல்ல பிரண்டா நா பாக்கறேன் . என்ன புரிஞ்சிக்கிவிங்கன்னு நெனச்சேன் .. நா தழுதழுக்க அவள் உணர்ச்சிவயப்பட்டாள் .

' எல்லாம் எனக்கு புரியுது வாணி ..கூல் … கூல் ப்ளீஸ் . உங்குளுக்கு என்ன சொல்றதுன்னுதான் யோசிக்கிறேன் . இதை பத்தி ஐ மீன் ஒங்க மனநெல பத்தி ஒங்க கணவர்கிட்ட பேசினீங்களா ?'

'சுரேஷ் நேத்து ராத்திரி போன் பண்ணார் . இன்னும் பழைய ப்ராஜெக்ட் முடியலையாம் . ஆகஸ்ட்ல முடிஞ்சிருமாம் .புது ப்ரொஜெக்ட்க்கு போறப்ப விசா கெடச்சுருண்ணும் சொன்னார் . ஆக்ஸ்ட்ல வந்துட்டு அக்டோபர்ல போய்டலாம்ன்னு சொன்னார் என்றவள் மேலும் தொடர்ந்தாள் 'நா உங்ககிட்ட எதையும் மறச்சு பேசனதில்ல .உங்களோட நட , ஓட, பாடி லாங்குவேஜி ,சிரிக்கிறது, மேனரிசம் எல்லாம் அசைப்புல அவரை மாதிரியே இருக்கு .'

"நா சொல்லவர்ரது ஒங்களுக்கு புரியலையா" ன்னு கேட்டிங்களே அப்பவே எனக்கு எல்லாம் புரிஞ்சிடிச்சி . ஒங்களுக்கு தனிமை பிரச்சினை , ஒங்களோட அவர மிஸ்பண்ட்ரீங்க . மனசுக்கு புடிச்ச வாழ்க்க,  தொண தூரத்துல இருக்கறதால ஒங்களுக்குள்ள ஒரு வெறுமை பரவிருக்கு . அதான் மனசு சஞ்சலப்படுது . அதனால தான் யாரைப்பார்த்தாலும் கோவம் வருது , அந்த ஜொள்ளர்களை  சமாளிக்க முடியாம தடுமாறுறீங்க .  ஏம் ஐ கரெக்ட் ? 'கேள்வியோடு நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன் .

சில நொடித்துளிகள் அமைதியாக தரையை பார்த்துக்கொண்டிருந்தாள்

.கண்கள் கலங்கி இருந்தன ,மொத்த உணர்ச்சியையும் முகம் பிரதிபலித்தது .

'நீங்க சொல்றது உண்மதான், ஐம் ஸ்ட்ராகிளிங் அண்ட் லோன்லினெஸ் கில்லிங் மீ ..' நா தழு தழுக்க சொன்னாள் .

' ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் , ஒரு விதத்துல  ஒங்கள நா பாராட்றன் , யாரோ ஒருத்தர்கிட்ட ஒங்க பிரச்சினையை சொன்னாத்தான் அதுக்கு ஒரு வடிகால் கிடைக்கும் . அந்த யாரோ ஒருத்தர் யாருங்கறது  ரொம்ப முக்கியம் , அந்த யாரோ ஒருத்தர் உங்களோட தனிமைய தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிற ஆளா இருக்க கூடாது , அப்பதான் ஒங்க ப்ரஸ்ட்ரேஷன் தொலையும் . ஒங்களோட எதிர்பார்ப்புல எந்த தப்பும் இல்ல ,யு ஆர் எ பிரேவ் கேர்ள் , ஐ அப்ப்ரிசியேட் யு வாணி .'  என்று சொல்லிட்ட்டு நானே மேலும் தொடர்ந்தேன் .

'நா உண்மைய சொல்லுனும்னா , ஒங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் . நீங்க என்கிட்ட ஓப்பனா பேசறது நெருக்கம் காட்றது எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் . நா ஒன்னும் பரமயோக்கியன் லாம் கெடயாது . வாய்ப்பு கெடச்சா பல பாத்திரத்துல சாப்புடுறவன் . ஆனா ஒங்க மேல எப்பவுமே மரியாதை கலந்த அட்ராக்ஷன் உண்டு . நீங்க போன் பண்ண அப்ப நா ரொம்ப குஷியாயிட்டேன் . நீங்களும் இப்ப இயலாமைல தான் இருக்கீங்க . கட்டுப்பாடு இங்கிறது ஒன்னும் பெரிய இரும்பு கேட்டு இல்ல . அது ஒரு மெல்லிய நூலிழை , அத அறுத்தெறிய உடல் வலிமை தேவையில்லை . பெரிய அளவில் மனவலிமை தேவை . நாம்ப ரெண்டு பேரும் கட்டுப்பாட்டை மீறதுக்கு ரொம்ப நேரம் ஆவாது . ஆனா என் உள்மனசு அத ஏத்துக்குல, அதுக்கு உங்க மேல இருக்குற மரியாதை மட்டுமில்ல உங்களோட அந்த ஓபன் டாக்கும் தான் காரணம்  . உங்களோடது லவ் மேரேஜ் ,நீங்க அவரோட மேல எவ்ளோ பிரியம் வச்சிருக்கீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது . நா என்னதான் ஒங்க கணவர் மாதிரி இருந்தாலும் ,என்னோட மேனரிசம் அவர மாதிரி இருந்தாலும் நான் உங்க கணவர் இல்லைங்கிறதுதான் எதார்த்தம் .

 'ஒரு ப்ரண்டா ஒங்களுக்கு ஒரு அட்வைஸ் . இங்கிருந்த போனவொடனே உங்க கணவருகிட்ட பேசுங்க . ஒங்க தனிமைய, ஒங்க எதிர்பார்ப்ப, ஒங்க தேவைய ஓப்பனா அவருகிட்ட சொல்லுங்க .  ஆப்ட்ரால் அவரு ஒங்களோட பெட்டெர்ஹாப் . ஓப்பனா பேசறதுல ஒரு தப்பும் இல்ல . ஒன்னு அவர வேலையைவிட்டு இந்தியாவுக்கு வரச்சொல்லுங்க ,இல்லன்னா சீக்கிரமா நீங்க அவரு கூட அங்க போயி செட்டுல ஆகிடுங்க . தேவைப்பட்ட டூரிஸ்ஸ்ட் விசாவுல கூட போகமுடியும்  . சேந்திருந்திங்கன்னா ஒங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது .ஆல் தி பெஸ்ட் ' என்றேன்.

'சார் ரொம்ப தேங்க்ஸ்  ,நா இப்ப தெளிவாயிட்டேன் . என்ன பேசுறோம் ,என்ன செய்றோம்னு கூட என்னால யோசிக்கமுடியல . ரொம்ப கொழம்பிபோய்ட்டேன் . நீங்களும் ஓப்பனா பேசுனீங்க , அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு .தயவு செஞ்சி என்ன தப்பா நெனைக்க வேண்டாம் ப்ளீஸ் '.

'டோன்ட் ஒர்ரி .நா ஒங்கள ஒரு நாளும் தப்பா நெனைக்கமாட்டேன் . பை ஹார்ட் யு ஆர் சோ கிளீன் .பேசிக்கலா நீங்க ரொம்ப நல்ல பொண்ணு . சமய சந்தர்ப்பங்கள் தான் மனுஷன தப்பு பண்ண வைக்குது . கொஞ்சம் சுதாரிச்சுட்டா எல்லா ப்ராபளமும் சரியா போய்டும் . அப்புறம் இன்னொரு விஷயம் ,நாம ரெண்டு பெரும் இனிமே சந்திக்க வேண்டாம் . ஒங்கள பாத்து நானும் என்ன பாத்து ஒங்க மனசும் அலைபாய வேண்டாம் .இதுவே கடைசி சந்திப்பா இருக்கட்டும் . என்ன சொல்றீங்க '.

கொஞ்சம் யோசித்தவள் 'சார் அப்பிடியே ஆகட்டும் 'என்று சொல்லியபடி  எழுந்து நடக்க தொடங்கினாள் . எனக்கு நிம்மதியாக இருந்துது , அவளை நானறிந்த வரையில் ,அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் .

'போடா பைத்தியக்காரா .. என்றது ஒரு மனம் .நீ செஞ்சதுதான் சரி என்றது இன்னொரு மனம் .

              இந்த சம்பவங்கள் நடந்து பதினைந்து இருபது வருடங்களுக்குப் பிறகு ஒரு ஏப்ரல் மாதத்தில்  வேலை நிமித்தமாக நான் கோவை சென்றிருந்தேன்  . கோவை விமான நிலையத்தில் அப்படியொன்றும் நெரிசல் இல்லை . அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகள் தெரிந்தன . நான் வந்திறங்கிய பாம்பே பிளைட் மற்றும் ஓவர் ஓவர்சீஸ் பிளைட் , இரண்டிலும் வந்திறங்கிய பயணிகள் என்ற அளவில் விமான நிலையம் பரபரப்புக் காட்டியது   .  நான் எதிர்பார்த்ததை விட கோவை நன்றாகவே வளர்ந்திருந்தது . பெல்ட் நம்பர் 3 யின் அருகில்   என்னுடைய பெட்டிகளின் வரவிற்காக காத்திருந்தேன்  .

'சார் .. சார்.. நீங்க வாசு சார் தானே .. என்று கேட்டபடியே ஒரு பெண் என் எதிரில் நின்று கொண்டிருந்தாள் . நாற்பதுகளின் மத்தியிலோ அல்லது இறுதியிலோ இருக்கக்கூடும் . கொஞ்சமாய் நரைமுடி ,அதிகம் ஒல்லியுமில்லை அதிகம் உடம்பும் போடவில்லை ,நடுத்தர தேகம் . உதடுகளில்  புன்முறுவல் வழிய நின்றிருந்தாள் . ஒப்பனையில்ல முகத்தில் உணர்ச்சி கோடுகள் நெளிந்தன  .   என்னால் அந்த பெண்ணை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை .

'எஸ் .. ஐம் வாசு . நீங்க ? '

'என்ன தெரியலையா ..?'

'ம்ம்..சாரி ,எனக்கு உங்கள யாருன்னு தெரியல ?

'சார் நா வாணி ,கலைவாணி .

'எ.. எ .. எந்த வாணி ...? ' கேட்டுக்கொண்டே மேல்தாடையை லேசாக சொரிந்துகொண்டேன் . எனக்கு உடனே நினைவுக்கு வரவில்லை . சில நிமிட முயற்சிக்குப்பின் நினைவுக்கு வந்தாள் வாணி .

நல்லா இருக்கீங்களா ?

ஐயாம் பைன் . நீங்க ?

நல்லா இருக்கேன் . அவரு ரெஸ்ட்ரூம் போயிருக்காரு . ஒங்கள பாத்தேன் ,ஒரு ஹாய் சொல்லலாமேன்னு  … அவள் முடிக்கவில்லை

... ஓ ! நைஸ் டு சி யு அகைன்  .ரொம்ப வருஷங் கழிச்சி ஒங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம் .

சி யு சார் . அவரு வந்துட்டாரு ... போய்விட்டாள் .

என்ன நடக்கிறது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல்  நான் இன்னும் யோசித்துக் கொண்டு நிற்கிறேன் அங்கேயே ...

 

 

மௌனம் -- 19 வித சூழ்நிலைகள் மற்றும் அதன் பொருள்...


மௌனம் என்ற சொல் நான் அறிந்த வரையில் 19 வகையான பொருளை தருகிறது .

* பெண் பார்க்கும் சமயத்தில் கேள்வி கேட்கப்படும் நேரத்தில் பெண்ணின் மௌனம் --- சம்மதம் /ஒப்புதல்

* நாம் விரும்பிய சில உறவுகளை பிரியும் போது மௌனம் -- துன்பம்

* இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது மௌனம் --நம்பிக்கை

* நம் இதயத்தில் அமர்ந்த அந்த காதலில் மௌனம் -- சித்ரவதை

* நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும்போது மௌனம் -- பொறுமை

* நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் மௌனம் -- அடக்கம்

*திருமணக்கோலத்தில் உள்ள அமைதியின் போது மௌனம் -- வெட்கம்

* தவறுதலாக தவறு செய்தபோது மௌனம் -- பயம்

* ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது மௌனம் --எதிர்பார்ப்பு

*கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது மௌனம் --ஆற்றாமை

* இலக்கை அடைய ஒருமுகப்படுத்தும் முயற்சி மௌனம் -- வலிமை /சக்தி

* தீவிரமாகப் போராடும்போது மௌனம் -- ஒருமுகத்தன்மை

* பிடிக்காத செயல்களை இயலாமையின் காரணமாக ஒத்துக்கொள்ளும் மௌனம் --எதிர்ப்பு

* எதிர்பாராத தோல்வி மற்றும் கேலிப்பேச்சு மௌனம் -- அவமானம்

* நம்மைவிட்டு பிரிந்தவர்களை பாசத்தோடு நினைக்கும்போது மௌனம் --சொற்களற்ற துயரம்

* நம்மை கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது மௌனம் -- ஆத்திரம் , சினம்

* கற்ற வித்தைகளை கையாளும் போது மௌனம் -- மகிழ்ச்சி

* அயர்ந்த வேளையில் அமைதியான அந்த மௌனம் -- எதிர்பார்ப்பில்லாத உறக்கம்

* உறக்கம் என்று அனைவரும் நினைத்திருக்க உடலோ அசையாமல் அயர்ந்திருக்க அண்டை அயலாரை சூழ்ந்திருக்கும் மௌனம் -- சாவு / இறப்பு .

நன்றி !

 

கோவில் சுவற்றில் சிவப்பு வெள்ளை நிற பூச்சு பூசுவதன் நோக்கம் - காரணங்கள்...


வியப்பூட்டும் எட்டு உண்மைகள் :

* மனிதனின் உடம்பில் , உதிரத்தில் வெள்ளை அணுக்கள் , சிவப்பு அணுக்கள் இருக்கும் . சிவப்பு அணுக்கள் உயிரி காற்றை நம் உடலின் பகுதிகளுக்கு எடுத்து செல்கிறது . வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு வலிமையை நமக்கு அளிக்கிறது . இதை குறிக்கவே கோவிலில் சிவப்பு வெள்ளை நிறம் அடிக்கப்படுகிறது .

* ஆண்களின் விந்து வெள்ளை நிறமுடையது , பெண்களின் கருமுட்டை சிவப்பு நிறமுடையது . இவை இரண்டும் சேர்ந்துதான் உயிர் உண்டாகிறது . இதனையும் கோவில் வண்ணம் குறிக்கிறது . மனதில் உடலில் உயிர் உண்டாவதைபோல் இறைவனின் மனம் கருவறையில் உள்ளது . அதனால் தான் கோவிலின் இறைவனின் உறைவிடமும் கருவறையை .

* கோவிலின் வாயில் படியை தொட்டு வணங்குவதில் பின்னணியில் அறிவியல் உண்மைகள் இருக்கின்றன . நாம் குனிந்து தொடுத்தாம்பொது நமக்கு பணிவை ஏற்படுத்துகிறது . உடம்பில் சூரிய நாடியை இயக்குகிறது . படிக்கட்டை தொட்டபின் நம் நெற்றியில் விரல்களை வைத்து அழுத்த வேண்டும் . அப்போது நம்மிடம் மறைந்துள்ள தீய சக்திகள் விலகி தெய்வ சந்நிதியில் இருந்து சில அதிர்வலைகளை நம்மிடம் உண்டாக்கும் .

நன்றி !

11.16.2020

 சொல் விளையாட்டு ...


  இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு .

சான்றாக " தேர் ஓடுவது எதனால் ?" " தெருவை மெழுகுவது எதனால் ? " என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில் 

"அச்சாணியால் , அச்' சாணியால் "என்பது .

தேர் ஓடுவது அச்சாணியால் , தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்ற பதில் விளக்கம் கிடைக்கும் .

 " நீ வசிக்கும் ஊர் எது ?" , " உன் காலில் காயம் வந்தது எப்படி ? " என்ற இரு கேள்விகளுக்கு ஒரே பதில் .. " செங்கல்பட்டு " என்பது .

" சாம்பார் மணப்பதேன் ?" , " உடல் நலிவதேன் " என்ற இரு வினாக்களுக்கும் ஒரே பதில் " பெருங் காயத்தால் " என்பது .

இன்று ஆங்கில வழிக்கு கல்வி பெருகிவிட்டதாலும் , தமிழை ஏதோ கடமைக்கென்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் நினைத்து கற்பிப்பதாலும் இன்றைய பிள்ளைகளுக்கு பெரும்பாலும் தமிழ் புலமையும் ஆர்வமும் குறைந்துவிட்டது . அவர்கள் பெரும்பாலும் மனனம் செய்து படித்து கடந்து விடுகிறார்கள் . இந்த செயல் மிகவும் ஆபத்தானது ,எதிர்கால சந்ததியை , தமிழ் மொழியை அழிக்கக்கூடிய செயல் என்பதை நம்மை அறியாமல் நாம் செய்துகொண்டிருக்கிறோம் . இத்தகைய சொல்விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும் , சிந்தனைத்திறனையும் , ஆர்வத்தையும் , தமிழில் புலமையையும் ஒரு சேர வளர்க்கும் . பெற்றோர்களே சிந்தியுங்கள் ... தாய்மொழி வழி கேள்வி சிறந்த சிந்தனையாளனை வளர்த்தெடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .

  சொல்லறிவோம்... இயக்குநர் !


    இயக்குனர் / இயக்குநர் - இதில் எது சரி ....


    இயக்குநர் , பெறுநர் , ஓட்டுநர் , அனுப்புநர் என்ற தான் எழுதவேண்டும் .

    வந்தனர் , சென்றனர் என வினைச்சொல்லின் பன்மை விகுதிக்கு மட்டுமே "னர்" பயன்படும் .

   அந்த திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கினர் என்ற எழுதவேண்டும் .

    ஒரு செயலை செய்பவரைக் குறிப்பிடும்போது "நர்" விகுதி சேர்ப்பதே சரி , அதுவே இலக்கண விதியும் கூட .

 சம்பளம் என்ற வார்த்தை  பிறந்த கதை ...


  பழங்காலத்தில் செய்த வேலைக்கு  சம்பளமாக  நெல்லும் உப்புமாகக் கொடுப்பார்களாம் . ஏன் எனில் அவை இரண்டும் தான் சாப்பாட்டின் முதன்மையான மூலப்பொருள்கள் என்பதால் . நெல் வகைகளில் சிறந்த சம்பாவும் உப்பும் சேர்ந்து " சம்பளம்" ஆயிற்று .  அளம் என்றால் உப்பையும் உப்பு விளையும் இடத்தையும் குறிக்கும் காரணப்பெயர் ஆகும் .


   எனவே சம்பா அளம் என்பது காலப்போக்கில் " சம்பளம் " என மாறியது . சம்பளம் என்ற சொல் தமிழ் சொல் தான் .


 தகவல் : சொல்லாராய்ச்சிக் கட்டுரை என்ற புத்தகத்திலிருந்து .

 அப்பாவின் அடையாளங்கள் ..!


    ஒடிந்த தோடு 

    வளைந்த மூக்குத்தி 

    உறைந்த உப்புத்தாரைகள் 

    கிழிந்த உதடு 

    கன்னத்தில் கைரேகைகள் 

    அப்பாவின் அடையாளங்கள் 

    அம்மாவின் அங்கங்களில் 

    ஆங்காங்கே ....!

11.10.2020

 திருவளர்ச்செல்வன் / திருநிறைச்செல்வன் பொருள் அறிக ...


 திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னால் ---

திருவளர்ச்செல்வன் /செல்வி என்று போட்டிருப்பார்கள் . இதற்கு அந்த வீட்டின் மூத்த மகன் அல்லது மகளின் திருமணம் என்பது பொருள் .

திருநிறைச்செல்வன் /செல்வி என்று போட்டிருந்தால் இளைய மகன் அல்லது மகளின் திருமணம் என்று பொருள் .

திருவளர்ச்செல்வன் /செல்வி எனும் போது திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன் /மகளுக்கு இளைய சகோதர சகோதரிகள் உள்ளனர் ,இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது . உறவு முறைகள் மற்றும் ஊர் மக்கள் பெண் அல்லது மாப்பிள்ளைக்கு கேட்டு வரலாம் என்பதை குறிப்பால் உணர்த்தினார் இந்த தமிழ் வார்த்தைகளின் மூலம் .

திருநிறைச்செல்வன் /செல்வி எனும் போது திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன் /மகளுக்கு திருமணத்திற்கு  பின் எங்கள் வீட்டில் வேறு  குழந்தைகள் திருமணத்திற்கு  இல்லை எனவே யாரும் பெண் கேட்டு அல்லது மாப்பிள்ளை கேட்டு வரவேண்டாம் என்று குறிப்பால் உணர்த்தினார் . எவ்வளவு அழகான தமிழ் மொழி ! எவ்வளவு அழகான ஆழமான பொருள் புதைப்பு , குறிப்புணர்வு .

நன்றி !

  

10.30.2020

 தமிழ் மொழியின் சொல்வளம் அறிவோம் ...


     சொல்லாழமும் பொருளாழமும் மிக்க வழமையான ஒரு மொழி தமிழ் . 

அம்மாவை குறிக்கும் வேறு சொற்களை கீழே காண்போம் .


அம்மா  , அம்மனை , அம்மு , அம்மே , அம்மை , அன்னை ,ஆச்சாள் , ஆச்சி ,ஆத்தா , ஆத்தாள் , ஆய் , ஆயம் , ஆயி , இறைவி , ஈன்றவள் , கோ , சடமி , தம்மனை , தம்மை , தம்மோய் , தல்லி ,தவ்வை , தன்னை , தாத்திரு ,தாய் , தாயார் , பயந்தாள் ,பெற்றவள் , மாதிரு , மாதா ,மாதிருகை , முதன்மை , மொய்தாய் , மோய் , மௌவை , வீரை , இன்னும் பிற .


அம்மா என்ற சொல் சுமார் 200  மொழிகளில் அம்மா என்றோ , மா என்ற வருகிறது என்பது வியப்பான செய்தியல்லவா .


  அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள் :


 அச்சன் , அண்ணல் , அண்ணா,அத்தன் , அத்தா , அப்பா , அப்பன் ,அப்பு , அம்மான் , அய்யா , அவிச்சன் ,ஆ , ஆச்சான் , ஆஞ்ஞ்சான் , ஆஞ் ன் , இரவின் , ஈரி , ஈன்றவன் , எம்மான் , ஐ , ஐயன் , ஐயா , குரவன், கோ ,சன்னியன் , ஞாதி ,தகப்பன் , தந்தே , தாதிரு , பெற்றவன் , போத்து , போய், முதல்வன் , வாப்பா .

10.28.2020

 தொல்காப்பியம் --அறிமுகம் 


             தமிழின் ஆதி அடையாளமாக நமக்கு கிடைத்திருப்பது தொல்காப்பியம் மட்டுமே . தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை அல்லது சிலரால் திட்டமிட்டு கிடைக்காமல் செய்யப்பட்டுவிட்டது . தொல்காப்பியம் உயர் தனி செம்மொழியாம் தமிழின் மிகப்பழமையான இலக்கணநூல் ஆகும் . இந்த நூல் மதுரை திட்டம் (Project Madurai ) என்ற இணைய தளத்தில் இலவசமாக கிடைக்கிறது .


தொல்காப்பியம் உரையாசிரியர்கள் 


           தமிழ்மொழியில் கற்போருக்கு கிடைத்திட்ட முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்றாலும் இதற்கு முன்னால் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற நூல் இருந்தது என்பதற்கான சான்றுகள் இலக்கிய நூலகளில் காணப்படுகிறது . ஆனால் அகத்தியம் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற ஐய்யப்பாடு சில அறிஞர்களிடம் நிலவுகிறது . 


         ஒரு மொழி பிறக்கும்போது பேச்சு மொழியாக இருந்தது பின்புதான் எழுத்து வடிவம் பெற்று எழுத்து மொழியாக முடியும் . என் கணிப்பில்  பேச்சு மொழியாக இருந்து எழுத்து மொழி ஆவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் அக்கால சூழ்நிலையில் . இன்றைய நாகரீகம் மிகவும் வளர்ந்த நிலையில் புதிதாக ஒரு மொழி பேச்சு வழக்கில் தொடங்கினால் எழுத்து மொழியாக குறைந்தது நூறு அங்குகளாகலாம் .


    உலகில் சில மொழிகள் பேச்சு மொழியாகவே இருந்து அழிந்துபோன வரலாறுகள் உண்டு . வேறு சில மொழிகள் பேச்சு எழுத்து எனக் கொண்டிருந்தாலும் சிறந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் இல்லாமல் இருப்பது கண்கூடு .எழுத்து மொழியான பின் இலக்கியங்கள் அடிப்படையில் இலக்கணம் உருவானது . தமிழ் மொழியில் கிடைத்த தொல்காப்பியம் நம் மொழியின் தொன்மை , பழமை , வளமை , பெருமையை நமக்கு புலப்படுத்துகின்றது .


வளரும் ...


 

  நம் தாய் தமிழின் பெருமையும் வளமும் ...


     ஆல், அரசு , வேம்பு , அத்தி ,மா , பலா ,வாழை , பூவரசு போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுந்தான் 'இலை " என்று பெயர் .


   அகத்தி , பசலி , வல்லாரை , முருங்கை போன்றவற்றின் இலை " கீரை "ஆகின்றது .


   மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் " பூண்டு" என்று பெயர் .


  அறுகு, கோரை ,தர்ப்பை முதலியவைகளின் இலைகள் " புல்" என்று அழைக்கப்படுகின்றது .


  மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்கு பெயர் " தழை' ஆகும் .


  நெல் , வரகு முதலியவற்றின் இலைகள் "தாள் " ஆகும் .


  சப்பாத்தி , கள்ளி , தாழை இனங்களின் இலைகளுக்கு "மடல்' என்று பெயர் .

     

    கரும்பு , நாணல் முதலியவற்றின் இலைகள் ' தோகை" என்று அழைக்கப்படுகின்றது .


  தென்னை , கமுகு , பனை முதலியவற்றின் இலைகள் " ஓலை " என்று சொல்லப்படுகின்றன .


    இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள் இலக்கணம் மட்டுமல்ல , தாவரவியல் , அறிவியலும் அடங்கி இருக்கிறது நம் தமிழில்  பொருள் வளம் மட்டுமல்ல , பேரழகும் கூட கொட்டிக் கிடக்கின்றது  . சுவைக்கத்தான் ஆளில்லை .

8.09.2020

 

ரேவ தீ !

ஒருத்தி
அவளுக்குள்
ஒரு தீ …

கண்ணில்
வன்
தீ …

கடமையில்
மென்
தீ …

கவிதையாய்
பெண்
தீ…

உதட்டில்
மௌனத்
தீ …

உள்ளத்தில்
இயலாமைத்
தீ …

அச்சமுதிர்த்த
லட்சிய
தீ …

அவள்
பெயர்
ரேவ தீ…

மேன்மை விரும்பும்
பெண்மை தளும்பும்
வன்மம் பொறுக்கா
உண்மை விளம்பி ...

 

பேச்சு தமிழ் -- சில விளக்கங்கள்


      பேச்சு தமிழில் நாம் அன்றாடம் அடுக்கு தொடர் போல பயன்படுத்தும் சில வார்த்தைகளை நாம் ஊடுருவிப் பார்த்ததில்லை அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுகிறோம் . ஆனால் உண்மையில் அந்த சொற்களுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர் . நமக்கே தெரியாதது போது நாம் எப்படி நம் குழந்தைகளுக்கு விளக்கப்போகிறோம் என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி . கீழே சில தொடர்வார்த்தைகளையும் அதன் பொருளையும் கொடுத்துள்ளேன் . தமிழ் எவ்வளவு அழகான ஆழமான , பொருள் பொதிந்த மொழி என்பது இதிலிருந்து விளங்கும் .

அந்தி சந்தி

அந்தி -- மாலைக்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது

சந்தி -- இரவுக்கும் காலைக்கும் இடையில் உள்ள விடியல் பொழுது

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர் -- செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்

ஆணிவேர் -- செடியின் கீழ் ஆழமாக செல்லும் உறுதியான வேர்

குண்டக்க மண்டக்க

குண்டக்க -- இடுப்பு பகுதி

மண்டக்க -- தலைப் பகுதி

சிறுவர்கள் கால்பக்கம் , தலைப்பக்கம் பார்க்காமல் தூங்குவார்கள் .அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி மாறி இருத்தலே குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள் .

அரை குறை

அரை -- ஒரு பொருளில் சரி பாதி அளவு

குறை -- அந்த சரி பாதியளவில் குறைவாக உள்ளது குறை .

உதாரணம் -- அரை குறை வேலை

அக்கம் பக்கம்

அக்கம் -- தன் வீடும் தான் இருக்கும் இடமும்

பக்கம் -- பக்கத்து வீடும் பக்கத்தில் உள்ள இடமும்

கார சாரம்

காரம் -- உறைப்புச்சுவை .

சாரம் சார்ந்தது

*காரம் சார்ந்த பிற சுவைகள் )

இசகு பிசகு

இசகு -- இயல்பு தெரிந்தும் ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்

பிசகு -- தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்

இடக்கு முடக்கு

இடக்கு -- எள்ளி நகைத்தும் , இகழ்ந்தும் பேசுதல்

முடக்கு -- கடுமையாக எதிர்த்தும் தடுத்த்தும் பேசுதல்

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் -- தாளத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ ஆடுவது

பாட்டம் -- ஆட்டத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ பாடுவது

அலுப்பு சிலிப்பு

அலுப்பு -- உடலில் உண்டாகும் வலியும் குடைச்சலும்

சலிப்பு -- உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும் சோர்வும்

தோட்டம் துரவு / தோப்பு துரவு

தோட்டம் -- செடி , கொடி கீரை பயிரிடப்படும் இடம்

தோப்பு -- மரங்களின் தொகுப்பு

துரவு -- கிணறு

காடு கரை

காடு -- மேட்டு நிலம் (முல்லை )

கரை -- வயல் - நிலம் (மருதம் நன்செய் , புன்செய் }

காவும் கழனியும்

கா -- சோலை

கழனி -- வயல்

மருதம் சார்ந்த நிலப்பகுதி

நத்தம் புறம்போக்கு

நத்தம் -- ஊருக்குப் பொதுவாகிய மந்தை . ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்

புறம்போக்கு -- ஆடு மாடு மேய்வதற்காக அரசு ஒதுக்கிய புல்நிலம் -- ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்

பழக்க வழக்கம்

பழக்கம் -- ஒருவர் ஒரு செயலை பலகாலம் செய்து வருவது

வழக்கம் -- பலர் ஒரு செயலைப் பல காலம் கடைப்பிடித்தது வருவது (மரபு )

சத்திரம் சாவடி

சத்திரம் -- இலவசமாக சோறு போடும் இடம் --விடுதி

சாவடி -- இலவசமாக தங்கும் இடம் - விடுதி

நொண்டி நொடம்

நொண்டி -- காலில் அடிபட்டோ அல்லது அடிபடாமலோ , ஏதோ ஒரு குறையால் நடக்க முடியாமல் குறைபாட்டுடன் நடப்பவர் அல்லது நடக்க முடியால் இருப்பவர் .

நொடம் -- கை முடங்கி அதனால் கையின் செயல் அற்றவர் (நுடம் , முடம் )

பற்று பாசம்

பற்று -- நெருக்கமாக உறவாடி இருத்தல்

பாசம் -- பிரிவில்லாமல் சேந்தே இருத்தல் .

ஏட்டிக்குப் போட்டி

ஏட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயல் . ஏடல் -- விருப்பம்

போட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயலுக்கு எதிராக வரும் ஒன்று .

கிண்டலும் கேலியும்

கிண்டல் -- ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல் (கிண்டி தெரிந்து கொள்ளுதல் )

கேலி -- எள்ளி நகையாடுதல்

ஒட்டு உறவு

ஒட்டு -- இரத்த சம்பந்தம் உடையவர்கள் (தாய் தந்தை , உடன் பிறந்தவர்கள் , மக்கள் }

உறவு -- பெண் கொடுத்த அல்லது பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள் .

பட்டி தொட்டி

பட்டி -- மிகுதியாக ஆடுகள் வளர்க்கப்படும் இடம் (ஊர் )

தொட்டி -- மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம் -- ஊர்

கடை கண்ணி

கடை -- தனித்தனியாக அமைந்த வணிக நிலையம்

கண்ணி -- தொடர்ச்சியாக கடைகள் அமைந்த கடைவீதி

பேரும் புகழும்

பேரும் --- வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்

புகழ் -- வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை

நேரம் காலம்

நேரம் -- ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைந்த பொழுது .

காலம் -- ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை

பழி பாவம்

பழி -- நமக்கு தேவையில்லாத பொருந்தாத செயலைச் செய்ததால் இப்பிறப்பில் உண்டாகும் பழிப்பு

பாவம் -- தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள் .

கூச்சலும் குழப்பமும்

கூச்சல் -- துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும் அவல ஒலி (ஓலம்) , கூ --கூவுதல்

குழப்பம் -- அவள் ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல் ..

நகை நட்டு

நகை -- பெரிய அணிகலன்களைக் குறிக்கும் (அட்டியல் , ஒட்டியாணம் , சங்கிலி )

நட்டு -- சிறிய அணிகலன்களைக் குறிக்கும் . திருகு உள்ள தோடு , காப்பு , கொப்பு )

பிள்ளை குட்டி

பிள்ளை --- பொதுப் பெயர் . இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்

குட்டி -- இது பெண் குழந்தையைக் குறிக்கும்

பங்கு பாகம்

பங்கு -- கையிருப்பு . பணம் , நகை , பாத்திரங்களைபிரித்தல் (அசையும் சொத்து )

பாகம் -- வீடு ,மனை நிலா புலன்களைப் பிரித்தல் (அசையா சொத்து )

வாட்ட சாட்டம்

வாட்டம் -- வளமான தோற்றம் , வாளிப்பான உடல் , அதற்கேற்ற உயரம் .

சாட்டம் -- உடல் வளமுள்ள கணம் . தோற்றப் பொலிவு

காய் கறி

காய் -- காய்களின் வகைகள்

கறி -- சைவ உணவில் கறிக்கு பயன்படும் கிழங்கு வகைகளும் கீரை வகைகளும்

கால்வாய் வாய்க்கால்

கால்வாய் -- குளத்திற்கு தண்ணீர் வரும் கால் (பாதை)

வாய்க்கால் -- குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால் (பாதை ) . பாதை என்பது நீர் வழிப் பாதையைக் குறிக்கும் .

ஈவு இரக்கம்

ஈவு -- ஈதல் , கொடை வழங்குதல்

இரக்கம் -- அருள் . பிற உயிர்களின் மேல் பரிவு கொள்ளுதல்

பொய்யும் புரட்டும்

பொய் -- உண்மை இல்லாததை சொல்லுதல்

புரட்டு - ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி , உண்மையைப் போல் நம்பும் படியாக கூறுவது

சூடு சொரணை

சூடு -- ஒருவர் தாக்காத சொல்லை ப் பேசும்போது / தாக்காத செயலைச் செய்யும் போது நமக்கு ஏற்படும் மனக்கொதிப்பு ( மனவெதுப்பு , எரிச்சல் )

சொரணை -- நமக்கு ஏற்படும் மான உணர்வு

பட்டம் விருது

பட்டம் -- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றில் படித்து பெறுவது . பெயருக்குப் பின்னால் இடம் பெறும் .
விருது -- தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது . இது பெயருக்கு முன்னால் இடம் பெறும் .

 

திருக்குறள் -- சில அரிய செய்திகள்...


திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812

திருக்குறளின் முதல் பெயர் -- முப்பால்

மொத்த அதிகாரங்கள் 133

திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் -- ஒன்பது

அறத்துப்பாலில் உள்ள குறட்ப்பாக்கள் 380

பொருட்ப்பாலில் உள்ள குறட்ப்பாக்கள் 700

காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250

திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த சொற்கள் -- 14000

மொத்த எழுத்துக்கள் -- 42194

திருக்குறளுக்கு ஒரு வரியில் இருவர் உரை எழுதியுள்ளனர்

இடம் பெற்ற இரு மலைகள் -- அனிச்சம் , குவளை

இடம் பெற்ற ஒரே பழம் -- நெருஞ்சிப்பழம்

இடம் பெற்றுள்ள ஒரே விதை -- குன்றிமணி

இதுவரை 35 மொழிகளில் வெளிவந்துள்ளது

ஆங்கிலத்த்தில் 40 மொழி பெயர்த்துள்ளனர்

பயன்படுத்தப் படாத ஒரே உயிரெழுத்து -- ஒள

இருமுறை வரும் ஒரே அதிகாரம் -- குறிப்பறிதல்

இந்த நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் -- பனை , மூங்கில் -- இரண்டு மரங்களும் மிகப் பழமையான தமிழ் மண்ணில் வித்துக்கள் , அழியா புகழ்பெற்றவை , அளவற்ற பயன்களை கொண்டவை . வறண்ட நிலத்திலும் பல நூறாண்டு காலம் வாழும் தன்மை பெற்றவை .

அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து -- னி --1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது .

இடம் பெறாத சொற்கள் -- தமிழ் , கடவுள் , மனிதன்

மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் -- தஞ்சை ஞானப்பிரகாசம்

முதன் முதலில் உரை எழுதியவர் -- மணக்குடவர்

முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் -- ஜி .யு .போப்

பத்தாவது உரையாசிரியர் -- பரிமேலழகர்

கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இரு எழுத்துக்கள் -- ளி ங

எழுபதுகோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் மட்டும் இடம்பெற்றுள்ளது

ஏழு என்ற சொல் எட்டு குறள்களில் இடம் பெற்றுள்ளது

திருக்குறள் வக்ரபோலி என்ற பழங்குடி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

தமிழ் எழுத்துக்கள் 247 இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை

தமிழ் மொழி , தமிழ்நாடு என குறிப்பிடப்படவில்லை . மொழி ,நாடு என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன .

தகவல்கள் google லில் இருந்து தருவி கொடுக்கப்பட்டுள்ளது .

 

மாட்டு வண்டியின் உதிரி பாகங்களின் பெயர்களும் அதன் பயன்களும்...


வண்டி :

முன்பெல்லாம் விவசாயம் செய்பவர்கள் இரண்டு மாடுகளை வண்டி இழுப்பதற்காக கட்டாயமாக வீட்டில் வைத்திருப்பார்கள் . மோட்டார் வாகனங்கள் அதிகம் புழக்கம் இல்லாத காலங்களில் விவசாயிகள் மட்டுமில்லாமல் வணிகர்களும் பெரிதும் பயன்படுத்தி வந்தனர் . இந்த வண்டிக்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு .

வண்டியானது சுற்று சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது . மாட்டு வண்டிகளின் பயன்பாடு தொன்று தொட்டே நம்மிடையே இருந்து வருகிறது . விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களையும் பிற பொருட்களையும் ஏற்றிச் செல்ல அதிகமாக பயன்படுத்தியது மாட்டு வண்டி மட்டுமே . மாட்டு வண்டியில் பயப்படுத்தப் படும் மாடுகள் ஜல்லிக்கட்டிற்கும் பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள் . ஆனால் சில பகுதிகளில் வண்டி மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது .

கடையாணி

இரண்டு சங்கரங்களையும் அசினை விட்டு வெளியேற விடாமல் பிடித்துக்கொள்ளும் வண்டியில் உள்ள மைய அச்சு தொடங்கி கடைசியாக உள்ள பகுதியாக இருப்பதால் கடையாணி என்று பெயர் வந்திருக்கலாம் .

அல்லைப்படல்

பொதுவாகப் படல் என்றால் மறைக்க உதவுவது என்று பொருள் . வண்டியின் இரண்டு பக்கவாட்டுகளிலும் பொருட்கள் விழாதவாறு தடுக்கும் பாகத்திற்கு அல்லை படல் என்று பெயர் .

குடம்

ஆரக்கால்களை வட்டை (சக்கரத்தின் வெளிப்பகுதி ) யுடனும் மைய அச்சுடனும் இணைக்கும் பகுதிக்கு பெயர் தான் குடம் .

நுகத்தடி

வண்டியில் பூட்டும் மாடுகளைக் கட்டப் பயன்படும் நீளமான தடிப்பகுதியே இந்த நுகத்தடியாகும் . நுகத்தடியில் மாடுகளை பூட்ட அதன் இரு பாகங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும் .

வட்டை

வண்டிச் சக்கரத்தின் வெளிப்பகுதியை வடிவமைக்க உதவும் பகுதி தான் வட்டை . ஒரு சக்கரத்தினை வடிவமைக்க ஆறு ஆறு வட்டைகள் தேவை . இந்த வட்டையானது தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருக்கும் .

சவாரித்தப்பை

மாடுகள் சவாரி செய்ய ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தப்பை . இது ஆட்கள் சவாரி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டது .

பட்டா

சக்கரத்தின் நுனிப்பகுதியில் இரும்பினைக் கொண்டு சக்கரத்தைச் சுற்றிலும் அதன் மேற்புறம் தேய்ந்து போகாதவாறும் சேதமடையாமலும் பாதுகாக்க பட்டா அமைக்கப்பட்டிருக்கும் .

இருசு

இருசு க்கட்டை தான் வண்டியின் மையப்பகுதியைத் தாங்கி நிற்கும் . வண்டியின் அச்சானது இந்த இருசின் வழியே தான் செல்லும் . அந்த அச்சின் முனையில் இருக்கும் சக்கரங்கள் இருசின் உதவியுடனே இணைக்கப்பட்டிருக்கும் . வண்டி சுழல்வதில் இருசின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது .

ஏர்க்கால் , மூக்கேர் , ஏர்க்கால்சட்டம்

ஏர்க்கால் சட்டம் என்பது மாட்டு வண்டியினுடைய மையப்பகுதியிலிருந்து மாட்டினைப் பூட்டப் பயன்படும் இடம் வரையுள்ள பகுதிக்கு பெயர் தான் ஏர்க்கால் சட்டம் . இந்த ஏர்க்கால் சட்டத்தில் உள்ள நுனிப்பகுதி மூக்கேர் எனவும் , வண்டியை ஓட்டுபவர் அமரும் பகுதிக்கு முன்பாக உள்ள பகுதி ஏர்க்கால் எனப் பல பெயர்களால் இடத்துக்கு தகுந்தவாறு அழைக்கப்படும் .

பூ ட்டாங் கயிறு , பூ ட்டாங் குச்சி

நுகத்தடியில் காணப்படும் துளையில் ஒன்றில் பூட்டாங் குச்சியும் மற்றொரு துளையில் பூ ட்டாங் கயிறும் தொங்க விடப்பட்டிருக்கும் . இந்த இரண்டின் மூலமே மாடுகள் பூட்டப்பட்டு வண்டி இழுக்கும் .

முளைக்குச்சி

அல்லை ப்படல் இந்த முளைக்குச்சியின் உதவியோடு கட்டப்பட்டிருக்கும் . வண்டியிலுள்ள பொருட்கள் கீழே விழாமல் இருப்பதற்கு இதுவும் பக்க பலமாக இருக்கும் .

கொலு ப்பலகை

வண்டி ஓட்டுபவர் அமர்ந்து வண்டியை இயக்க எதுவாக அமைக்கப்பட்டுள்ள பலகை தான் இந்தக் கொலு ப்பலகை . இது சில நேரங்களில் வண்டியை ஓட்டுபவர் நின்று கொண்டே பயணிக்க எதுவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் .

 

எழுத்தாளர் கு அழகிரிசாமி !


      ருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் கு. அழகிரிசாமி அவர்கள் .சிறுகதை, கட்டுரை , புதினங்கள் , நாடங்கங்கள் , கவிதைகள் , கீர்த்தனைகள் , மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார் .

      இவர் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் என்ற சிற்றூரில் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23 ம் நாள் குருசாமி -- தாயம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாகப் பிறந்தார் .வசதியின்மையின் காரணமாக நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை . ஆனால் விடாமுயற்சியுடன் எஸ் எஸ் எல் சி வரை படித்து முடித்தார் . அந்த சிற்றோரில் அந்த காலத்தில் எஸ் எஸ் எல் சி வரை படித்த ஒரே மனிதர் என்ற பெருமை அவருக்கு இருந்தது .பள்ளிப்படிப்பைவிட அனுபவத்தில் அவர் பெற்ற அறிவே அதிகம் .இவர் எழுத்தாளர் கி .ராஜநாராயணனின் இளமைக்கால நண்பர் ஆவர் .

     ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது . தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார் .பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார் . அரசுப்பணியில் சேர தேர்வு பெற்றதால் சார்பதிவாளர் அலுவலத்தில் முப்பத்தைந்து ரூபாய்க்கு எழுத்தர் பணி கிடைத்தது . ஆனால் நாள் தோறும் பத்திரங்களைப் பதிவிட அவருக்குப் பிடிக்கவில்லை . அந்த எழுத்தர் பணி மனநிறைவு தரவில்லை அவருக்கு , இடைப்பட்ட காலத்தில் அவர் எழுத்திய முதல் சிறுகதை தொகுப்பான " உறக்கம் கொள்ளுமா ? " 1943 ஆம் ஆண்டு " ஆனந்த போதினி " மாத இதழில் வெளிவந்தது .

      தன்னுடைய முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்ட ஆனந்த போதினி சென்னைக்கு வந்து சேர்ந்தார் . அந்த பத்திரிகையின் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் , அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்துகொண்டு அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார் . பிரசண்ட விகடனில் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும் , புதுமைப்பித்தனும் , தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள் . பின்னர் தமிழ்மணி என்ற அரசியல் வார இதழில் சேர்ந்து சில காலம் பணியாற்றினார் . அதன் பிறகு வை. கோவிந்தன் வெளியிட்ட சக்தி மாத இதழில் உதவி ஆசிரியராக சேந்தார் . அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ .ரங்கநாதன் . இவரின் முற்போக்கு சிந்தனையையும் ஆற்றலையும் கண்டுகொண்ட வை. கோவிந்தன் சக்தி இதழின் பதிப்பகத்தில் இடமளித்து எழுதுவதற்கு வாய்ப்பளித்தார் .

     இவரின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம் , காவடிச்சிந்து ஆகிய பாதிப்புகள் அவருடைய ஆராச்சித்திரனையும் மொழியாக்கத்தையும் வெளி உலகுக்கு தெரியப்படுத்தின . " ராஜ வந்திருக்கிறார் " என்று அவரது கதை இந்திய மொழிகளிலும் , ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை

இவரது " அன்பளிப்பு " என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது .


இவர் எழுதிய நூல்கள்

புதினங்கள்

டாக்டர் அனுராதா

தீராத விளையாட்டு

புது வீடு புது உலகம்

வாழ்க்கைப் பாதை

சிறுவர் இலக்கியம்

மூன்று பிள்ளைகள்

காளிவரம்

மொழிபெயர்ப்புகள்

மாக்சிம் கார்க்கியின் நூல்கள்

லெனினுடனும் சில நாட்கள்

அமெரிக்காவில் யுத்தம் வேண்டும்

விரோதி பணியாவிட்டால்

நாடகங்கள்

வஞ்ச மகள்

கவிச்சக்கரவர்த்தி

சிறுகதைத் தொகுப்புகள்

அன்பளிப்பு

சிரிக்கவில்லை

தவப்பயன்

வரப்பிரசாதம்

கவியும் காதலும்

செவிசாய்க்க ஒருவன்

புதிய ரோஜா

துறவு

கட்டுரைத் தொகுப்பு

இலக்கியத்தேன்

தமிழ் தந்த கவியின்பம்

தமிழ் தந்த கவிச்செல்வம்

நான் கண்ட எழுத்தாளர்கள்

திரு கு. அழகிரிசாமி சூலை திங்கள் 5 ஆம் தேதி 1970 ஆம் ஆண்டு இந்த உலக வாழ்வை நீத்தார் .

 

ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் -- உண்மையான பொருள் என்ன ?


     ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பது ஒரு பழ மொழி . உண்மையில் ஆடிக் காற்றில் அம்மி நகருமா ? அப்படியென்றால் ஏன் இந்த பழமொழி ? நம் முன்னோர்கள் தவறாக சொல்லி வைத்திருக் கிறார்களா ?

    ஆடி மாதத்தில் அதி வேகமாக காற்று அடிக்கும் , தென்மேற்கு பருவக் காற்றும் மழையும்  மிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்து செய்திதான் . ஆனால் எவ்வளவு காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவும் நகராது என்பதே உண்மை . அடிக்கும் முன் மாதங்கள் கோடை காற்று வீசும் மாதங்கள் .

       சித்திரை, வைகாசி மாதங்களில் கத்திரி வெயில் கடுமையாக இருக்கும் . அம்மாதகளில் அடிக்கின்ற வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் அம்மை நோய் வரும் . ஆடியில் வரும் காற்றும் , சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும் . அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள் . ஆடிக்குப் பின் அம்மை நோய் போய்விடும் .அதனால் தான் " ஆடிக் காற்றில் அம்மையும் நகரும் " என்றார்கள் . ஆனால் அந்த சொல் தொடர் திரிந்து காலப்போக்கில் " ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் " என்றாயிற்று . இனிமேலாவது பழமொழிகளின் சரியான பொருளை அறிந்து பயப்படுத்துவோமாக . நம் அடுத்த தலைமுறைக்கு அதை சரியான பொருளில் கடத்துவோமாக .



7.24.2020

ஐங்குறுநூறு --- சில தகவல்கள்

ஐங்குறுநூறு -- எட்டுத்தொகை என் வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று .இதில் உள்ள பாடல்கள் சங்ககாலத்தை சேர்ந்தவை . இது மூன்றடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்டது ஆகும் .ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை . ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன .

ஐங்குறுநூறில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன . இவற்றை தொகுக்க உதவும் பாடலும் பிரிவுகளும்
மருதத் திணைப் பாடல்கள் 100 -- ஓரம்போகியார்

நெய்தல் திணை பாடல்கள் -- 100 அம்மூவனார்

குறிஞ்சித் திணை பாடல்கள் -- 100 கபிலர்

பாலைத் திணை பாடல்கள் -- 100 --ஓதலாந்தையார்

முல்லைத் திணை பாடல்கள் -- 100 -- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

தொகுப்பித்தவர் -- யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

நூலின் அமைப்பு :

நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடலைகளில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன .
வேட்கைப்பத்து , வேழப்பத்து ,நெய்யோப்பத்து , கள்வன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து , தோழி வற்புறுத்தப்பத்து , செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும்பெயர் பெற்றன . தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது . அன்னாய் பத்து ,சொல்லாட்ட்சியும் ,பொருளாட்ச்சையும் பொருந்தியது .

விலங்கு பறவைகளை கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து , கேழற்பத்து , மயிற்பத்து , கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன . உள்ளுறை , உவமை , இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன . குறைந்த அளவிலான அடிகளைக் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல் , கரு ,உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன .

சுவைகளில் எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நூலை பிற்காலத்தில் ழிந்துபோகும் நிலையை எய்தியபோது பல சுவடிகளை சோத்தித்து தற்கால தமிழருக்கு பயன்படும் வகையில் 1903 ஆம் ஆண்டு முதன் முதலாக பதிப்பித்து வெளியிடப்பட்டது .

வாலிழை பாகத்து ஒருவன் என்ற சிவபெருமான் பாடலை கடவுள் வாழ்த்திய பாட்டாக எழுதி சங்ககாலத்திலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு பின்னர் சேர்க்கப்பட்டது இந்த பாடலை எழுதியவர் பெருந்தேவனார் ஆவார் . உண்மையில் கடவுள் வாழ்த்து பாடல் ஐங்குறுநூறு பாடல் காலத்தில் எழுதப்பட்டதல்ல .

அந்த பாடல் இதோ

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தான் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

இந்த பாடல் இறைவனின் விரிவாகத் தன்மையை ஒன்று , இரண்டு மூன்று என்று எண்ணிக்காட்டுகிறது .அவன் ஒருவன் நீலநிரப் பெண்ணைத் தன பாகத்தில் வைத்துக் கொண்டிருப்பவன் . அதனால் அவனுக்கு ஆண் - திருவடி , பெண் - திருவடி என்று இரண்டு திருவடிகள் . இரண்டும் இருவகைத் தாள் (முயற்சி) . இந்த இருவகை முயற்சியினால் மூன்று வகையான உலகங்களும் தோன்றின . அவை மேல், இடை , கீழ் - என்பன மூவகை உலகங்கள் .

பேச்சு தமிழ் -- சில விளக்கங்கள் !


பேச்சு தமிழில் நாம் அன்றாடம் அடுக்கு தொடர் போல பயன்படுத்தும் சில வார்த்தைகளை நாம் ஊடுருவிப் பார்த்ததில்லை அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுகிறோம் . ஆனால் உண்மையில் அந்த சொற்களுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர் . நமக்கே தெரியாதது போது நாம் எப்படி நம் குழந்தைகளுக்கு விளக்கப்போகிறோம் என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி . கீழே சில தொடர்வார்த்தைகளையும் அதன் பொருளையும் கொடுத்துள்ளேன் . தமிழ் எவ்வளவு அழகான ஆழமான , பொருள் பொதிந்த மொழி என்பது இதிலிருந்து விளங்கும் .

அந்தி சந்தி

அந்தி -- மாலைக்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது

சந்தி -- இரவுக்கும் காலைக்கும் இடையில் உள்ள விடியல் பொழுது

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர் -- செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்

ஆணிவேர் -- செடியின் கீழ் ஆழமாக செல்லும் உறுதியான வேர்

குண்டக்க மண்டக்க

குண்டக்க -- இடுப்பு பகுதி

மண்டக்க -- தலைப் பகுதி

சிறுவர்கள் கால்பக்கம் , தலைப்பக்கம் பார்க்காமல் தூங்குவார்கள் .அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி மாறி இருத்தலே குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள் .

அரை குறை

அரை -- ஒரு பொருளில் சரி பாதி அளவு

குறை -- அந்த சரி பாதியளவில் குறைவாக உள்ளது குறை .

உதாரணம் -- அரை குறை வேலை

அக்கம் பக்கம்

அக்கம் -- தன் வீடும் தான் இருக்கும் இடமும்

பக்கம் -- பக்கத்து வீடும் பக்கத்தில் உள்ள இடமும்

கார சாரம்

காரம் -- உறைப்புச்சுவை .

சாரம் சார்ந்தது

*காரம் சார்ந்த பிற சுவைகள் )

இசகு பிசகு

இசகு -- இயல்பு தெரிந்தும் ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்

பிசகு -- தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்

இடக்கு முடக்கு

இடக்கு -- எள்ளி நகைத்தும் , இகழ்ந்தும் பேசுதல்

முடக்கு -- கடுமையாக எதிர்த்தும் தடுத்த்தும் பேசுதல்

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் -- தாளத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ ஆடுவது

பாட்டம் -- ஆட்டத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ பாடுவது

அலுப்பு சிலிப்பு

அலுப்பு -- உடலில் உண்டாகும் வலியும் குடைச்சலும்

சலிப்பு -- உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும் சோர்வும்

தோட்டம் துரவு / தோப்பு துரவு

தோட்டம் -- செடி , கொடி கீரை பயிரிடப்படும் இடம்

தோப்பு -- மரங்களின் தொகுப்பு

துரவு -- கிணறு

காடு கரை

காடு -- மேட்டு நிலம் (முல்லை )

கரை -- வயல் - நிலம் (மருதம் நன்செய் , புன்செய் }

காவும் கழனியும்

கா -- சோலை

கழனி -- வயல்

மருதம் சார்ந்த நிலப்பகுதி

நத்தம் புறம்போக்கு

நத்தம் -- ஊருக்குப் பொதுவாகிய மந்தை . ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்

புறம்போக்கு -- ஆடு மாடு மேய்வதற்காக அரசு ஒதுக்கிய புல்நிலம் -- ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்

பழக்க வழக்கம்

பழக்கம் -- ஒருவர் ஒரு செயலை பலகாலம் செய்து வருவது

வழக்கம் -- பலர் ஒரு செயலைப் பல காலம் கடைப்பிடித்தது வருவது (மரபு )

சத்திரம் சாவடி

சத்திரம் -- இலவசமாக சோறு போடும் இடம் --விடுதி

சாவடி -- இலவசமாக தங்கும் இடம் - விடுதி

நொண்டி நொடம்

நொண்டி -- காலில் அடிபட்டோ அல்லது அடிபடாமலோ , ஏதோ ஒரு குறையால் நடக்க முடியாமல் குறைபாட்டுடன் நடப்பவர் அல்லது நடக்க முடியால் இருப்பவர் .

நொடம் -- கை முடங்கி அதனால் கையின் செயல் அற்றவர் (நுடம் , முடம் )

பற்று பாசம்

பற்று -- நெருக்கமாக உறவாடி இருத்தல்

பாசம் -- பிரிவில்லாமல் சேந்தே இருத்தல் .

ஏட்டிக்குப் போட்டி

ஏட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயல் . ஏடல் -- விருப்பம்

போட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயலுக்கு எதிராக வரும் ஒன்று .

கிண்டலும் கேலியும்

கிண்டல் -- ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல் (கிண்டி தெரிந்து கொள்ளுதல் )

கேலி -- எள்ளி நகையாடுதல்

ஒட்டு உறவு

ஒட்டு -- இரத்த சம்பந்தம் உடையவர்கள் (தாய் தந்தை , உடன் பிறந்தவர்கள் , மக்கள் }

உறவு -- பெண் கொடுத்த அல்லது பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள் .

பட்டி தொட்டி

பட்டி -- மிகுதியாக ஆடுகள் வளர்க்கப்படும் இடம் (ஊர் )

தொட்டி -- மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம் -- ஊர்

கடை கண்ணி

கடை -- தனித்தனியாக அமைந்த வணிக நிலையம்

கண்ணி -- தொடர்ச்சியாக கடைகள் அமைந்த கடைவீதி

பேரும் புகழும்

பேரும் --- வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்

புகழ் -- வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை

நேரம் காலம்

நேரம் -- ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைந்த பொழுது .

காலம் -- ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை

பழி பாவம்

பழி -- நமக்கு தேவையில்லாத பொருந்தாத செயலைச் செய்ததால் இப்பிறப்பில் உண்டாகும் பழிப்பு

பாவம் -- தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள் .

கூச்சலும் குழப்பமும்

கூச்சல் -- துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும் அவல ஒலி (ஓலம்) , கூ --கூவுதல்

குழப்பம் -- அவள் ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல் ..

நகை நட்டு
நகை -- பெரிய அணிகலன்களைக் குறிக்கும் (அட்டியல் , ஒட்டியாணம் , சங்கிலி )

நட்டு -- சிறிய அணிகலன்களைக் குறிக்கும் . திருகு உள்ள தோடு , காப்பு , கொப்பு )

பிள்ளை குட்டி

பிள்ளை --- பொதுப் பெயர் . இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்

குட்டி -- இது பெண் குழந்தையைக் குறிக்கும்

பங்கு பாகம்

பங்கு -- கையிருப்பு . பணம் , நகை , பாத்திரங்களைபிரித்தல் (அசையும் சொத்து )

பாகம் -- வீடு ,மனை நிலா புலன்களைப் பிரித்தல் (அசையா சொத்து )

வாட்ட சாட்டம்

வாட்டம் -- வளமான தோற்றம் , வாளிப்பான உடல் , அதற்கேற்ற உயரம் .

சாட்டம் -- உடல் வளமுள்ள கணம் . தோற்றப் பொலிவு

காய் கறி

காய் -- காய்களின் வகைகள்

கறி -- சைவ உணவில் கறிக்கு பயன்படும் கிழங்கு வகைகளும் கீரை வகைகளும்

கால்வாய் வாய்க்கால்

கால்வாய் -- குளத்திற்கு தண்ணீர் வரும் கால் (பாதை)

வாய்க்கால் -- குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால் (பாதை ) . பாதை என்பது நீர் வழிப் பாதையைக் குறிக்கும் .

ஈவு இரக்கம்

ஈவு -- ஈதல் , கொடை வழங்குதல்

இரக்கம் -- அருள் . பிற உயிர்களின் மேல் பரிவு கொள்ளுதல்

பொய்யும் புரட்டும்

பொய் -- உண்மை இல்லாததை சொல்லுதல்

புரட்டு - ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி , உண்மையைப் போல் நம்பும் படியாக கூறுவது

சூடு சொரணை

சூடு -- ஒருவர் தாக்காத சொல்லை ப் பேசும்போது / தாக்காத செயலைச் செய்யும் போது நமக்கு ஏற்படும் மனக்கொதிப்பு ( மனவெதுப்பு , எரிச்சல் )

சொரணை -- நமக்கு ஏற்படும் மான உணர்வு

பட்டம் விருது

பட்டம் -- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றில் படித்து பெறுவது . பெயருக்குப் பின்னால் இடம் பெறும் .
விருது -- தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது . இது பெயருக்கு முன்னால் இடம் பெறும் .

நன்றி !