8.09.2020

 

ரேவ தீ !

ஒருத்தி
அவளுக்குள்
ஒரு தீ …

கண்ணில்
வன்
தீ …

கடமையில்
மென்
தீ …

கவிதையாய்
பெண்
தீ…

உதட்டில்
மௌனத்
தீ …

உள்ளத்தில்
இயலாமைத்
தீ …

அச்சமுதிர்த்த
லட்சிய
தீ …

அவள்
பெயர்
ரேவ தீ…

மேன்மை விரும்பும்
பெண்மை தளும்பும்
வன்மம் பொறுக்கா
உண்மை விளம்பி ...

 

பேச்சு தமிழ் -- சில விளக்கங்கள்


      பேச்சு தமிழில் நாம் அன்றாடம் அடுக்கு தொடர் போல பயன்படுத்தும் சில வார்த்தைகளை நாம் ஊடுருவிப் பார்த்ததில்லை அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுகிறோம் . ஆனால் உண்மையில் அந்த சொற்களுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர் . நமக்கே தெரியாதது போது நாம் எப்படி நம் குழந்தைகளுக்கு விளக்கப்போகிறோம் என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி . கீழே சில தொடர்வார்த்தைகளையும் அதன் பொருளையும் கொடுத்துள்ளேன் . தமிழ் எவ்வளவு அழகான ஆழமான , பொருள் பொதிந்த மொழி என்பது இதிலிருந்து விளங்கும் .

அந்தி சந்தி

அந்தி -- மாலைக்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது

சந்தி -- இரவுக்கும் காலைக்கும் இடையில் உள்ள விடியல் பொழுது

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர் -- செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்

ஆணிவேர் -- செடியின் கீழ் ஆழமாக செல்லும் உறுதியான வேர்

குண்டக்க மண்டக்க

குண்டக்க -- இடுப்பு பகுதி

மண்டக்க -- தலைப் பகுதி

சிறுவர்கள் கால்பக்கம் , தலைப்பக்கம் பார்க்காமல் தூங்குவார்கள் .அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி மாறி இருத்தலே குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள் .

அரை குறை

அரை -- ஒரு பொருளில் சரி பாதி அளவு

குறை -- அந்த சரி பாதியளவில் குறைவாக உள்ளது குறை .

உதாரணம் -- அரை குறை வேலை

அக்கம் பக்கம்

அக்கம் -- தன் வீடும் தான் இருக்கும் இடமும்

பக்கம் -- பக்கத்து வீடும் பக்கத்தில் உள்ள இடமும்

கார சாரம்

காரம் -- உறைப்புச்சுவை .

சாரம் சார்ந்தது

*காரம் சார்ந்த பிற சுவைகள் )

இசகு பிசகு

இசகு -- இயல்பு தெரிந்தும் ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்

பிசகு -- தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்

இடக்கு முடக்கு

இடக்கு -- எள்ளி நகைத்தும் , இகழ்ந்தும் பேசுதல்

முடக்கு -- கடுமையாக எதிர்த்தும் தடுத்த்தும் பேசுதல்

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் -- தாளத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ ஆடுவது

பாட்டம் -- ஆட்டத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ பாடுவது

அலுப்பு சிலிப்பு

அலுப்பு -- உடலில் உண்டாகும் வலியும் குடைச்சலும்

சலிப்பு -- உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும் சோர்வும்

தோட்டம் துரவு / தோப்பு துரவு

தோட்டம் -- செடி , கொடி கீரை பயிரிடப்படும் இடம்

தோப்பு -- மரங்களின் தொகுப்பு

துரவு -- கிணறு

காடு கரை

காடு -- மேட்டு நிலம் (முல்லை )

கரை -- வயல் - நிலம் (மருதம் நன்செய் , புன்செய் }

காவும் கழனியும்

கா -- சோலை

கழனி -- வயல்

மருதம் சார்ந்த நிலப்பகுதி

நத்தம் புறம்போக்கு

நத்தம் -- ஊருக்குப் பொதுவாகிய மந்தை . ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்

புறம்போக்கு -- ஆடு மாடு மேய்வதற்காக அரசு ஒதுக்கிய புல்நிலம் -- ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்

பழக்க வழக்கம்

பழக்கம் -- ஒருவர் ஒரு செயலை பலகாலம் செய்து வருவது

வழக்கம் -- பலர் ஒரு செயலைப் பல காலம் கடைப்பிடித்தது வருவது (மரபு )

சத்திரம் சாவடி

சத்திரம் -- இலவசமாக சோறு போடும் இடம் --விடுதி

சாவடி -- இலவசமாக தங்கும் இடம் - விடுதி

நொண்டி நொடம்

நொண்டி -- காலில் அடிபட்டோ அல்லது அடிபடாமலோ , ஏதோ ஒரு குறையால் நடக்க முடியாமல் குறைபாட்டுடன் நடப்பவர் அல்லது நடக்க முடியால் இருப்பவர் .

நொடம் -- கை முடங்கி அதனால் கையின் செயல் அற்றவர் (நுடம் , முடம் )

பற்று பாசம்

பற்று -- நெருக்கமாக உறவாடி இருத்தல்

பாசம் -- பிரிவில்லாமல் சேந்தே இருத்தல் .

ஏட்டிக்குப் போட்டி

ஏட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயல் . ஏடல் -- விருப்பம்

போட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயலுக்கு எதிராக வரும் ஒன்று .

கிண்டலும் கேலியும்

கிண்டல் -- ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல் (கிண்டி தெரிந்து கொள்ளுதல் )

கேலி -- எள்ளி நகையாடுதல்

ஒட்டு உறவு

ஒட்டு -- இரத்த சம்பந்தம் உடையவர்கள் (தாய் தந்தை , உடன் பிறந்தவர்கள் , மக்கள் }

உறவு -- பெண் கொடுத்த அல்லது பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள் .

பட்டி தொட்டி

பட்டி -- மிகுதியாக ஆடுகள் வளர்க்கப்படும் இடம் (ஊர் )

தொட்டி -- மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம் -- ஊர்

கடை கண்ணி

கடை -- தனித்தனியாக அமைந்த வணிக நிலையம்

கண்ணி -- தொடர்ச்சியாக கடைகள் அமைந்த கடைவீதி

பேரும் புகழும்

பேரும் --- வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்

புகழ் -- வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை

நேரம் காலம்

நேரம் -- ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைந்த பொழுது .

காலம் -- ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை

பழி பாவம்

பழி -- நமக்கு தேவையில்லாத பொருந்தாத செயலைச் செய்ததால் இப்பிறப்பில் உண்டாகும் பழிப்பு

பாவம் -- தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள் .

கூச்சலும் குழப்பமும்

கூச்சல் -- துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும் அவல ஒலி (ஓலம்) , கூ --கூவுதல்

குழப்பம் -- அவள் ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல் ..

நகை நட்டு

நகை -- பெரிய அணிகலன்களைக் குறிக்கும் (அட்டியல் , ஒட்டியாணம் , சங்கிலி )

நட்டு -- சிறிய அணிகலன்களைக் குறிக்கும் . திருகு உள்ள தோடு , காப்பு , கொப்பு )

பிள்ளை குட்டி

பிள்ளை --- பொதுப் பெயர் . இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்

குட்டி -- இது பெண் குழந்தையைக் குறிக்கும்

பங்கு பாகம்

பங்கு -- கையிருப்பு . பணம் , நகை , பாத்திரங்களைபிரித்தல் (அசையும் சொத்து )

பாகம் -- வீடு ,மனை நிலா புலன்களைப் பிரித்தல் (அசையா சொத்து )

வாட்ட சாட்டம்

வாட்டம் -- வளமான தோற்றம் , வாளிப்பான உடல் , அதற்கேற்ற உயரம் .

சாட்டம் -- உடல் வளமுள்ள கணம் . தோற்றப் பொலிவு

காய் கறி

காய் -- காய்களின் வகைகள்

கறி -- சைவ உணவில் கறிக்கு பயன்படும் கிழங்கு வகைகளும் கீரை வகைகளும்

கால்வாய் வாய்க்கால்

கால்வாய் -- குளத்திற்கு தண்ணீர் வரும் கால் (பாதை)

வாய்க்கால் -- குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால் (பாதை ) . பாதை என்பது நீர் வழிப் பாதையைக் குறிக்கும் .

ஈவு இரக்கம்

ஈவு -- ஈதல் , கொடை வழங்குதல்

இரக்கம் -- அருள் . பிற உயிர்களின் மேல் பரிவு கொள்ளுதல்

பொய்யும் புரட்டும்

பொய் -- உண்மை இல்லாததை சொல்லுதல்

புரட்டு - ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி , உண்மையைப் போல் நம்பும் படியாக கூறுவது

சூடு சொரணை

சூடு -- ஒருவர் தாக்காத சொல்லை ப் பேசும்போது / தாக்காத செயலைச் செய்யும் போது நமக்கு ஏற்படும் மனக்கொதிப்பு ( மனவெதுப்பு , எரிச்சல் )

சொரணை -- நமக்கு ஏற்படும் மான உணர்வு

பட்டம் விருது

பட்டம் -- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றில் படித்து பெறுவது . பெயருக்குப் பின்னால் இடம் பெறும் .
விருது -- தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது . இது பெயருக்கு முன்னால் இடம் பெறும் .

 

திருக்குறள் -- சில அரிய செய்திகள்...


திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812

திருக்குறளின் முதல் பெயர் -- முப்பால்

மொத்த அதிகாரங்கள் 133

திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் -- ஒன்பது

அறத்துப்பாலில் உள்ள குறட்ப்பாக்கள் 380

பொருட்ப்பாலில் உள்ள குறட்ப்பாக்கள் 700

காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250

திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த சொற்கள் -- 14000

மொத்த எழுத்துக்கள் -- 42194

திருக்குறளுக்கு ஒரு வரியில் இருவர் உரை எழுதியுள்ளனர்

இடம் பெற்ற இரு மலைகள் -- அனிச்சம் , குவளை

இடம் பெற்ற ஒரே பழம் -- நெருஞ்சிப்பழம்

இடம் பெற்றுள்ள ஒரே விதை -- குன்றிமணி

இதுவரை 35 மொழிகளில் வெளிவந்துள்ளது

ஆங்கிலத்த்தில் 40 மொழி பெயர்த்துள்ளனர்

பயன்படுத்தப் படாத ஒரே உயிரெழுத்து -- ஒள

இருமுறை வரும் ஒரே அதிகாரம் -- குறிப்பறிதல்

இந்த நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் -- பனை , மூங்கில் -- இரண்டு மரங்களும் மிகப் பழமையான தமிழ் மண்ணில் வித்துக்கள் , அழியா புகழ்பெற்றவை , அளவற்ற பயன்களை கொண்டவை . வறண்ட நிலத்திலும் பல நூறாண்டு காலம் வாழும் தன்மை பெற்றவை .

அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து -- னி --1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது .

இடம் பெறாத சொற்கள் -- தமிழ் , கடவுள் , மனிதன்

மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் -- தஞ்சை ஞானப்பிரகாசம்

முதன் முதலில் உரை எழுதியவர் -- மணக்குடவர்

முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் -- ஜி .யு .போப்

பத்தாவது உரையாசிரியர் -- பரிமேலழகர்

கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இரு எழுத்துக்கள் -- ளி ங

எழுபதுகோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் மட்டும் இடம்பெற்றுள்ளது

ஏழு என்ற சொல் எட்டு குறள்களில் இடம் பெற்றுள்ளது

திருக்குறள் வக்ரபோலி என்ற பழங்குடி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

தமிழ் எழுத்துக்கள் 247 இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை

தமிழ் மொழி , தமிழ்நாடு என குறிப்பிடப்படவில்லை . மொழி ,நாடு என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன .

தகவல்கள் google லில் இருந்து தருவி கொடுக்கப்பட்டுள்ளது .

 

மாட்டு வண்டியின் உதிரி பாகங்களின் பெயர்களும் அதன் பயன்களும்...


வண்டி :

முன்பெல்லாம் விவசாயம் செய்பவர்கள் இரண்டு மாடுகளை வண்டி இழுப்பதற்காக கட்டாயமாக வீட்டில் வைத்திருப்பார்கள் . மோட்டார் வாகனங்கள் அதிகம் புழக்கம் இல்லாத காலங்களில் விவசாயிகள் மட்டுமில்லாமல் வணிகர்களும் பெரிதும் பயன்படுத்தி வந்தனர் . இந்த வண்டிக்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு .

வண்டியானது சுற்று சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது . மாட்டு வண்டிகளின் பயன்பாடு தொன்று தொட்டே நம்மிடையே இருந்து வருகிறது . விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களையும் பிற பொருட்களையும் ஏற்றிச் செல்ல அதிகமாக பயன்படுத்தியது மாட்டு வண்டி மட்டுமே . மாட்டு வண்டியில் பயப்படுத்தப் படும் மாடுகள் ஜல்லிக்கட்டிற்கும் பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள் . ஆனால் சில பகுதிகளில் வண்டி மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது .

கடையாணி

இரண்டு சங்கரங்களையும் அசினை விட்டு வெளியேற விடாமல் பிடித்துக்கொள்ளும் வண்டியில் உள்ள மைய அச்சு தொடங்கி கடைசியாக உள்ள பகுதியாக இருப்பதால் கடையாணி என்று பெயர் வந்திருக்கலாம் .

அல்லைப்படல்

பொதுவாகப் படல் என்றால் மறைக்க உதவுவது என்று பொருள் . வண்டியின் இரண்டு பக்கவாட்டுகளிலும் பொருட்கள் விழாதவாறு தடுக்கும் பாகத்திற்கு அல்லை படல் என்று பெயர் .

குடம்

ஆரக்கால்களை வட்டை (சக்கரத்தின் வெளிப்பகுதி ) யுடனும் மைய அச்சுடனும் இணைக்கும் பகுதிக்கு பெயர் தான் குடம் .

நுகத்தடி

வண்டியில் பூட்டும் மாடுகளைக் கட்டப் பயன்படும் நீளமான தடிப்பகுதியே இந்த நுகத்தடியாகும் . நுகத்தடியில் மாடுகளை பூட்ட அதன் இரு பாகங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும் .

வட்டை

வண்டிச் சக்கரத்தின் வெளிப்பகுதியை வடிவமைக்க உதவும் பகுதி தான் வட்டை . ஒரு சக்கரத்தினை வடிவமைக்க ஆறு ஆறு வட்டைகள் தேவை . இந்த வட்டையானது தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருக்கும் .

சவாரித்தப்பை

மாடுகள் சவாரி செய்ய ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தப்பை . இது ஆட்கள் சவாரி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டது .

பட்டா

சக்கரத்தின் நுனிப்பகுதியில் இரும்பினைக் கொண்டு சக்கரத்தைச் சுற்றிலும் அதன் மேற்புறம் தேய்ந்து போகாதவாறும் சேதமடையாமலும் பாதுகாக்க பட்டா அமைக்கப்பட்டிருக்கும் .

இருசு

இருசு க்கட்டை தான் வண்டியின் மையப்பகுதியைத் தாங்கி நிற்கும் . வண்டியின் அச்சானது இந்த இருசின் வழியே தான் செல்லும் . அந்த அச்சின் முனையில் இருக்கும் சக்கரங்கள் இருசின் உதவியுடனே இணைக்கப்பட்டிருக்கும் . வண்டி சுழல்வதில் இருசின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது .

ஏர்க்கால் , மூக்கேர் , ஏர்க்கால்சட்டம்

ஏர்க்கால் சட்டம் என்பது மாட்டு வண்டியினுடைய மையப்பகுதியிலிருந்து மாட்டினைப் பூட்டப் பயன்படும் இடம் வரையுள்ள பகுதிக்கு பெயர் தான் ஏர்க்கால் சட்டம் . இந்த ஏர்க்கால் சட்டத்தில் உள்ள நுனிப்பகுதி மூக்கேர் எனவும் , வண்டியை ஓட்டுபவர் அமரும் பகுதிக்கு முன்பாக உள்ள பகுதி ஏர்க்கால் எனப் பல பெயர்களால் இடத்துக்கு தகுந்தவாறு அழைக்கப்படும் .

பூ ட்டாங் கயிறு , பூ ட்டாங் குச்சி

நுகத்தடியில் காணப்படும் துளையில் ஒன்றில் பூட்டாங் குச்சியும் மற்றொரு துளையில் பூ ட்டாங் கயிறும் தொங்க விடப்பட்டிருக்கும் . இந்த இரண்டின் மூலமே மாடுகள் பூட்டப்பட்டு வண்டி இழுக்கும் .

முளைக்குச்சி

அல்லை ப்படல் இந்த முளைக்குச்சியின் உதவியோடு கட்டப்பட்டிருக்கும் . வண்டியிலுள்ள பொருட்கள் கீழே விழாமல் இருப்பதற்கு இதுவும் பக்க பலமாக இருக்கும் .

கொலு ப்பலகை

வண்டி ஓட்டுபவர் அமர்ந்து வண்டியை இயக்க எதுவாக அமைக்கப்பட்டுள்ள பலகை தான் இந்தக் கொலு ப்பலகை . இது சில நேரங்களில் வண்டியை ஓட்டுபவர் நின்று கொண்டே பயணிக்க எதுவாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் .

 

எழுத்தாளர் கு அழகிரிசாமி !


      ருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் கு. அழகிரிசாமி அவர்கள் .சிறுகதை, கட்டுரை , புதினங்கள் , நாடங்கங்கள் , கவிதைகள் , கீர்த்தனைகள் , மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார் .

      இவர் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் என்ற சிற்றூரில் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23 ம் நாள் குருசாமி -- தாயம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாகப் பிறந்தார் .வசதியின்மையின் காரணமாக நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை . ஆனால் விடாமுயற்சியுடன் எஸ் எஸ் எல் சி வரை படித்து முடித்தார் . அந்த சிற்றோரில் அந்த காலத்தில் எஸ் எஸ் எல் சி வரை படித்த ஒரே மனிதர் என்ற பெருமை அவருக்கு இருந்தது .பள்ளிப்படிப்பைவிட அனுபவத்தில் அவர் பெற்ற அறிவே அதிகம் .இவர் எழுத்தாளர் கி .ராஜநாராயணனின் இளமைக்கால நண்பர் ஆவர் .

     ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது . தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார் .பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார் . அரசுப்பணியில் சேர தேர்வு பெற்றதால் சார்பதிவாளர் அலுவலத்தில் முப்பத்தைந்து ரூபாய்க்கு எழுத்தர் பணி கிடைத்தது . ஆனால் நாள் தோறும் பத்திரங்களைப் பதிவிட அவருக்குப் பிடிக்கவில்லை . அந்த எழுத்தர் பணி மனநிறைவு தரவில்லை அவருக்கு , இடைப்பட்ட காலத்தில் அவர் எழுத்திய முதல் சிறுகதை தொகுப்பான " உறக்கம் கொள்ளுமா ? " 1943 ஆம் ஆண்டு " ஆனந்த போதினி " மாத இதழில் வெளிவந்தது .

      தன்னுடைய முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்ட ஆனந்த போதினி சென்னைக்கு வந்து சேர்ந்தார் . அந்த பத்திரிகையின் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் , அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்துகொண்டு அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார் . பிரசண்ட விகடனில் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும் , புதுமைப்பித்தனும் , தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள் . பின்னர் தமிழ்மணி என்ற அரசியல் வார இதழில் சேர்ந்து சில காலம் பணியாற்றினார் . அதன் பிறகு வை. கோவிந்தன் வெளியிட்ட சக்தி மாத இதழில் உதவி ஆசிரியராக சேந்தார் . அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ .ரங்கநாதன் . இவரின் முற்போக்கு சிந்தனையையும் ஆற்றலையும் கண்டுகொண்ட வை. கோவிந்தன் சக்தி இதழின் பதிப்பகத்தில் இடமளித்து எழுதுவதற்கு வாய்ப்பளித்தார் .

     இவரின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம் , காவடிச்சிந்து ஆகிய பாதிப்புகள் அவருடைய ஆராச்சித்திரனையும் மொழியாக்கத்தையும் வெளி உலகுக்கு தெரியப்படுத்தின . " ராஜ வந்திருக்கிறார் " என்று அவரது கதை இந்திய மொழிகளிலும் , ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை

இவரது " அன்பளிப்பு " என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது .


இவர் எழுதிய நூல்கள்

புதினங்கள்

டாக்டர் அனுராதா

தீராத விளையாட்டு

புது வீடு புது உலகம்

வாழ்க்கைப் பாதை

சிறுவர் இலக்கியம்

மூன்று பிள்ளைகள்

காளிவரம்

மொழிபெயர்ப்புகள்

மாக்சிம் கார்க்கியின் நூல்கள்

லெனினுடனும் சில நாட்கள்

அமெரிக்காவில் யுத்தம் வேண்டும்

விரோதி பணியாவிட்டால்

நாடகங்கள்

வஞ்ச மகள்

கவிச்சக்கரவர்த்தி

சிறுகதைத் தொகுப்புகள்

அன்பளிப்பு

சிரிக்கவில்லை

தவப்பயன்

வரப்பிரசாதம்

கவியும் காதலும்

செவிசாய்க்க ஒருவன்

புதிய ரோஜா

துறவு

கட்டுரைத் தொகுப்பு

இலக்கியத்தேன்

தமிழ் தந்த கவியின்பம்

தமிழ் தந்த கவிச்செல்வம்

நான் கண்ட எழுத்தாளர்கள்

திரு கு. அழகிரிசாமி சூலை திங்கள் 5 ஆம் தேதி 1970 ஆம் ஆண்டு இந்த உலக வாழ்வை நீத்தார் .

 

ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் -- உண்மையான பொருள் என்ன ?


     ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பது ஒரு பழ மொழி . உண்மையில் ஆடிக் காற்றில் அம்மி நகருமா ? அப்படியென்றால் ஏன் இந்த பழமொழி ? நம் முன்னோர்கள் தவறாக சொல்லி வைத்திருக் கிறார்களா ?

    ஆடி மாதத்தில் அதி வேகமாக காற்று அடிக்கும் , தென்மேற்கு பருவக் காற்றும் மழையும்  மிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்து செய்திதான் . ஆனால் எவ்வளவு காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவும் நகராது என்பதே உண்மை . அடிக்கும் முன் மாதங்கள் கோடை காற்று வீசும் மாதங்கள் .

       சித்திரை, வைகாசி மாதங்களில் கத்திரி வெயில் கடுமையாக இருக்கும் . அம்மாதகளில் அடிக்கின்ற வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் அம்மை நோய் வரும் . ஆடியில் வரும் காற்றும் , சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும் . அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள் . ஆடிக்குப் பின் அம்மை நோய் போய்விடும் .அதனால் தான் " ஆடிக் காற்றில் அம்மையும் நகரும் " என்றார்கள் . ஆனால் அந்த சொல் தொடர் திரிந்து காலப்போக்கில் " ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் " என்றாயிற்று . இனிமேலாவது பழமொழிகளின் சரியான பொருளை அறிந்து பயப்படுத்துவோமாக . நம் அடுத்த தலைமுறைக்கு அதை சரியான பொருளில் கடத்துவோமாக .