7.10.2020

சந்துரு என்கிற சேது -- சிறுகதை 

அந்த தெருவில் ஏறக்குறைய நாற்பது வீடுகள் இருந்தன .நடுநாயகமாக இருந்த அந்த வீடு இடிந்து சிதைந்து போயிருந்தது . வீட்டின் முன்னால் இருந்த அந்த வேப்ப மரம் மட்டும் கிளைகளோடு விரிந்து பரந்து தலை நிமிர்ந்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது . பார்த்து பத்து வருஷமாகிப்போனாலும் அது அவனை உடனே இனம் கண்டுவிட்டது போல தென்றலை அவன் மேல் வீசியடித்து ஸ்பரிசித்தது . இன்னமும் அதன் பாசம் அப்படியே இருந்தது கண்டு அவன் நெகிழ்ந்து போனான் . அந்த மரத்தை கொஞ்சநேரம் கட்டிப் பிடித்தபடியே நின்றான் .
பல மாதங்கள் சவரம் செய்யப்படாத முகத்தோடும் கழுத்தில் தொங்கிய தலைமுடியோடும் அவன் இருந்தான் . கண்ணனுக்கு கருப்புக் கண்ணாடியும் தலைக்கு தொப்பியும் அணிந்திருந்தான் . தன்னுடைய அடையாளங்களை மறைத்து பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசப்பட்டு தெரிந்தான் . அவனை பார்த்தவுடனே அந்த ஊர்வாசிகளுக்கு தெரிந்துவிடும் அவன் அந்த ஊர் மனிதன் இல்லை என்பது .
“ யாருப்பா நீ ? ஒனக்கு என்ன வேணும் ... ரொம்ப நேரமா நானும் பாக்கறேன் இடிஞ்சிபோன அந்த வீட்டையே வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு நிக்கிறீயே... என்ன வேணும் ஒனக்கு ? “
அந்த பெரியவர் அதிகார தோரணையோடும் சந்தேக பார்வையோடும் கேள்விகளை அடுக்கினார் . அந்த கணீர் குரல் சேதுவை உலுக்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்திருந்தது . பெரியவரின் சத்தம் கேட்டு நான்கைந்து பேர் அங்கு கூடி விட்டனர் .
“ ஐயா … அது ஒண்ணுமில்ல …” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ சும்மாதான் பார்த்தேன் “ என்றவன் மேலும் சமாளித்துக் கொண்டு பேச தொடங்கினான் . “ எம் பேரு சந்துரு , ஊரு செங்கிப்பட்டி ,சிங்கப்பூர்ல வேல பாக்கேன் . இந்த வீட்டு பையன் சேதுராமன் என்னோட சிநேகிதன் . ஆறு மாசத்துக்கு முன்னாடி போன் பண்ணி வேல வேணுமுன்னு கேட்டான் , இப்ப தான் ஏற்பாடு பண்ண முடிஞ்சுது . போன் பண்ணேன் , இந்த நம்பர் பயன்பாட்டில் இல்லன்னு வருது , போன வாரந்தான் இந்தியாவுக்கு வந்தன். அதான் பாத்துட்டுப் போவலாமுன்னு இங்க வந்தன் . இதுதானே அவங்க வீடு ? ஏன் இடிஞ்சிபோயிருக்கு ? என்னாச்சு … “ ஒரு வழியாக சொல்லிமுடித்தான் சேது .
“ என்னப்பா நீ … வெவரம் தெரியாத புள்ளையா இருக்கியே ? ஒனக்கு விஷயமே தெரியாதா ? அந்த சேது பய செஞ்ச வேலையால அவங்க குடும்பமே அழிஞ்சி போச்சி ...”
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டான் “ அப்புடி என்ன செஞ்சான் அவன் ? “ .
“அந்த சேது பய , பக்கத்துல இருக்கற காலனி பொண்ண இழுத்துகிட்டு ராத்திரியோட ராத்திரியா ஊற விட்டே ஓடிட்டான் . அவங்க அப்பா அம்மாக்கு ஒரே அவமானமாய் போய்டிச்சி . அவனோட அப்பா ரொம்ப நல்ல மனுஷன் , தல நிமிந்து நடந்தவர அந்த பாவி தலை குனிய வச்சுட்டான் . பாவம் ! ரொம்ப மனசொடிஞ்சி போயிட்டார் . ரொம்ப நாளா மனக்கஷ்டத்துல இருந்தவரு ஒரு நாள் திடீர்னு செத்துப் போய்ட்டாரு . அப்பொறம் ஊர்ல எல்லாருமா சேர்ந்து அவருக்கு சாங்கியமெல்லாம் செஞ்சி எடுத்து எரிச்சிட்டோம் …” .
அப்பாவின் இறப்பு செய்தி அவனை கலங்கடித்தது , அது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்ட அந்த நிலைக்கு தான் தான் காரணம் என்பதால் துக்கம் தொண்டையை அடைத்தது . தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவன் ரொம்பவே தடுமாறினான் . சோகம் அப்பிக்கொள்ள , முட்டிக்கொண்டு அந்த கண்ணீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டான் .
“ நீ… ஏம்பா கண் கலங்கற ...” என்ற அந்த பெரியவரின் கேள்விக்கு மற்றொரு பெரியவரே பதில் சொன்னார் “ அந்த தம்பி சேதுவோட ஸ்நேகிதன்னு சொல்லிச்சில்ல , அதான் அதால துக்கம் தாங்க முடியல போலருக்கு பாவம் ! . ஆனா அந்த சேது பய கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கியோ ஜாலியா இருக்கான் .”
“ அவன் ஏன் இங்க வரணும் ? தராதரம் தெரியாத பய ... வந்தா ஊருக்குள்ள நொழைய விட்ருவோமா ? தரங்கெட்ட வேலைய செஞ்சா இப்புடித்தான் தண்டன கெடைக்கிம் . பாவம் ! நல்ல மனுஷன் போய் சேந்துட்டாரு ... “ மற்றொரு பெரியவர் பேசிக்கொண்டேபோனார் .
கனத்த இதயத்தோடும் அடுத்து என்ன சொல்ல போகிறார்களோ என்ற பயத்தோடும் நடுங்கிய குரலில் கேட்டான் "சேதுவோட அம்மா ...?"
“ அட அது இன்னும் கொடுமப்பா ... மவன் ஓடிப் போனப்பவே ரொம்ப மனசு உட்டுட்டாங்க . ஒரே மவன் , எத்தினியோ கனவு இருந்திருக்குமுள்ள . பத்தா கொறைக்கி புருஷன் வேற போய் சேந்துட்டாரு . அந்த துக்கமும் சேந்துட்டதால அவுங்குளுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சி . கொஞ்ச நாள் அங்க இங்கன்னு சுத்திட்டு திரிஞ்சாங்க . இப்ப ரெண்டு மூணு வருஷமா ஆளையே காணும் . எங்க போனாங்க ,என்ன ஆனாங்கன்னு யாருக்கும் ஒன்னு தெரியலப்பா “ .
'அம்மாவுக்கு என்னாச்சு ? எங்க போயிருப்பாங்க ? எங்க போயி தேடறது ? வெளியில் விவரிக்க முடியாத அளவுக்கு சோகம் , கலங்கிப் போயிருந்தான் .
“ அதாம்பா அவுங்களுக்கு இப்படி ஆயிபோனதனால இந்த ஊடு ரொம்ப நாளா பூட்டி கெடந்துச்சி , போன மழையில இடிஞ்சி உழுந்துடுச்சி . ம்ம்ம் ... என்ன செய்ய ... “ அந்த பெரியவர் பெருமூச்சு விட்டார் .
“ ம்ம் … நல்ல புள்ளய பெக்கணும் . ஓடுகாலிய பெத்தா இப்புடிதான் ஆவும் . விதி யாரை வுட்டுது ? “ மற்றொரு பெரியவர் புலம்பினார் .
“அந்த பய எங்க இருக்கானு ஒனக்கு தெரியுமா தம்பி ? “ முதலில் பேசிய பெரியவர் கேட்டார் .
“ தெரியலீங்க … போனும் போவல, அட்ரசும் குடுக்கல . தேடிட்டே இருக்கேன் “
“ திருட்டு பய … உண்மைய சொல்ல மாட்டான் . அப்பாவ முழுங்கிட்டான், அம்மாவ புத்திஸ்வாதீனமில்லாதவளா சுத்த விட்ருக்கான் . இன்னும் என்ன பண்ணபோறானோ ? குடும்பமே நாசமாய் போய்டிச்சி . கண்டவள கை புடிச்சா இப்படித்தான் நடக்கும் “ குருக்கள் தன் பங்கிற்கு திட்டிக்கொண்டிருந்தார் .
விடை பெற்றுக்கொண்டு சந்துரு என்று சொல்லிக்கொண்ட அந்த சேது திரும்பி நடக்க தொடங்கினான் . ஒரு பொண்ண வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா ? நா பண்ண தப்புக்கு அம்மா அப்பாவுக்கு எதுக்கு பனிஷ்மென்ட் ? என்ன ஒலகம்டா இது ? . அம்மா எங்க இருப்பாளோ ? உயிரோட இருப்பாளா ? எங்க போயி தேடுவன் ? இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த சமூகம் இப்பிடியே இருக்கும் . பெத்தவங்கள காப்பாத்த முடியாத புள்ளையாயிட்டானே ... ஜனங்க மாறவே மாட்டாங்களா ...
இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு அதிகம் இருந்ததால் லலிதாவும் அவனும் ஒரு கோயிலில் மாலைமாற்றிக் கொண்டு வெளியூருக்கு போயி கொஞ்சகாலம் வாழலாம் என்று முடிவெடுத்தனர் . ஒன்றிரண்டு வருடங்கள் போனால் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தனர் . எல்லாம் சரியான பிறகு பெற்றோரை அழைத்துக்கொண்டு பட்டணத்திலேயே செட்டிலாகலாம் என்று திட்டம் வைத்திருந்தனர் . ஆனால் ஊர் மாறவே இல்லை , அவனுக்கு எல்லாமே தப்பு தப்பாய் நடந்துவிட்டது .
இலக்கு இல்லாமல் நடந்து கொண்டிருந்தவனுக்கு சட்ரென்று ஒரு எண்ணம் அவனுக்குள் உதித்தது . லலிதா வீட்டுக்கு போயி பாக்கலாமா ? ஒரு முடிவுக்கு வந்தவனாய் காலனியை நோக்கி நடைபோட்டான் . அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலத்தின் அருகில் வீடுகள் இருந்தன . வீடுகள் என்று சொல்வதைவிட குடிசைகள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் . ஆங்காங்கே கொஞ்சம் பயிர் பச்சைகளும் மரம் மட்டைகளும் , ஆடு மாடுகளும் தென்பட்டன . பத்து வருடத்தில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்பது பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று தெரிந்தது .
“ அம்மா இங்க சின்னசாமி வீடு ...? “ அவன் முடிக்குமுன் அந்த பெண்மணி பதில் சொன்னாள் .
“ அந்த ஓடுகாலி லலிதாவோட வூடா ? அந்த கடைசி வூடா ? “ . தெருவின் கடைசி வீட்டை காட்டினாள் .
தெருவின் கோடியிலிருந்த அந்த குடிசை வீட்டை அடைந்தான் . வீட்டின் அருகில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த வெள்ளை நிற முசு முசு நாய் மௌனம் காத்தது அவனுக்குள் பய கதிர்களை பாய்ச்சியது .
“ அம்மா ... அம்மா …. “ என்றான் .
லலிதாவின் அம்மா வெளியே வந்து வெத்தலை எச்சிலை துப்பிவிட்டு “என்ன “ என்றாள் அதிகாரமாக .
தான் சந்துரு, சேதுவோட நண்பன் என்று தொடங்கி முழு விவரமும் சொன்னான் .
“ அந்த நாய பத்தி பேசாத …. ஒன்னும் தெரியாத எம் பொண்ணு மனச கெடுத்து ஊரை விட்டே கூட்டிட்டு ஓடிட்டான் . மேல்சாதி காரனுவலாம் வந்து எங்க சாதி சனத்தலாம் அடி அடின்னு அடிச்சனானுவ . ஒரு குடுச வுடாம கொளுத்தி புட்டானுவ . இங்க இருந்த பொம்பள புள்ளவோல கண்டபுடி பேசி கைய புடிச்சசி இழுத்தானுவோ . அவுனுவோ அடிச்ச அடியில உழுந்த எம்புருஷன் இத்தனை வருஷமாயும் இன்னும் எழிந்திருக்கவே இல்ல . ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் பாயிலேயே போய்கிட்டு கெடக்கார் . எந்தலையெழுத்து எல்லாத்தையும் அனுபவச்சிக்கிட்டு இன்னும் உசுரோட இருக்கேன் “ .
“ இங்க யார் கிட்டயும் எதுவும் கேட்காத . அவன் பேர சொன்னாலே அடிப்பாங்க . நீ கெளம்பு ,எங்கயாவது அவன பாத்தா ஊர் பக்கம் வந்துறாதுன்னு சொல்லு . இங்க வந்தா , அவங்க ஆளுங்களுக்கு முன்ன எங்க ஆளுங்களே அவங்க ரெண்டு பேரையும் வவுந்து போட்ருவாங்க “ .
இன்னும் சாதீயம் சூடு குறையாமல் கதகதப்பாய் இருப்பதை உணர்த்த அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான் .
மீண்டும் அம்மாவைப் பற்றிய நினைவுகள் அவனுள் முளைக்க ஆரம்பித்துவிட்டன . பதினைந்து இருபது நிமிட நடையில் பேருந்து நிலையம் வந்திருந்தான் . தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுரத்தையே இல்லாமல் கண்கள் வெறித்திருக்க எதையோ பறிக்கொடுத்தவன் போல நின்று கொண்டிருந்தான் .
“ டேய் சேது “ என்றொரு குரல் அவனுக்கு வெகு அருகில் கேட்டது . கவனம் களைந்து திரும்பி பார்த்தான் . யாராக இருக்கும் ? என்னை கண்டுபிடித்துவிட்டார்களா ? ஏதும் பிரச்சினை வருமோ ? என்று எண்ணியபடி திரும்பி திரும்பி நாலா புறமும் பார்த்தான் . யாரையும் காணோம் ,யாராக இருக்கும் ? , அவனுக்குள் கொஞ்சம் டென்சன் எட்டிப்பார்த்தது .
“ டேய் சேது ... “ என்ற படி எங்கிருந்தோ திடீரென்று தன் முன்னால் வந்து நின்ற அந்த மனிதனை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை . வழுக்கை தலையோடும் ,தாடியோடும் ஒடிசலான தேகம் தாங்கி ஒரு ஒற்றை நாடி மனிதன் நின்றிருந்தான் .
“ என்ன தெரியலையா ? நா பாலா … மறந்துட்டியா ? அடையாளம் தெரியலையா … ?” .
பத்து வருடங்களுக்கு முன் அடர்த்தியான முடிக்கு சொந்தக் காரனாக மீசையில்லாமல் திரிந்தவன் , இப்போது வழுக்கை வாங்கியிருந்தான் , முகத்தில் சுருக்கம் , மனதில் தெளிவு , கண்ணில் வெளிச்சம் என்று வித்தியாசப்பட்டிருந்தான் .
சேதுவுக்கு தூக்கிவாரிப்போட்டது . ஐயோ !..இவனா ? எப்படி கண்டுபுடிச்சான் இவன் ? மறுப்புடியும் ஏதாவது பிரச்சன வருமா ? ஊற விட்டு ஓடும் போது எதிரில் வந்தவன் உடனே ஊருக்கு போட்டுகுடுத்தவன் இந்த பாவி தானே ? இப்ப என்ன செய்யப் போறானோ ? யோசனையில் இருந்தான் சேது .
“ தாடியும் கீடியுமா இருந்தாலும் ஒன்ன நா கண்டு புடிச்சிட்டேன் . பயப்படாத .. நா ஒன்ன காட்டிக் குடுக்கமாட்டன் . நீ தான் சேதுன்னு யார்கிட்டயும் சொல்லமாட்டேன் . மனுஷங்கன்னா மாறக் கூடாதா என்ன ? தப்பு செஞ்சவன் தான் செஞ்ச தப்ப திருத்திக்க சான்ஸ் கெடச்சா திருத்தக்க கூடாதா என்ன ? அங்க வீட்டாண்டையே ஒன்ன பாத்தவுடனே கண்டுபிடிச்சிட்டேன் . அங்கேயே ஒங்கிட்ட சொல்லிருப்பேன் . ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சி போயிருக்கும் . அதான் ஒன்னும் சொல்லல . எப்பிடியும் நீ இங்க பஸ்ஸ்டாண்டுக்கு வருவேன்னு நெனச்சேன் , அதான் இங்க வந்து காத்துகிட்டு இருக்கேன். "அப்படி வா " என்று ஒதுக்கு புறமாக அழைத்துக்கொண்டு போனவன் காதோரமாக அடிக்குரலில் சொன்னான் . அம்மா ! எங்க வூட்டுல தான் இருக்கு . அவுங்களுக்கு மனசு கொழம்பி போய்டிச்சி . தெருவுல திரிஞ்சிக்கிட்டு இருந்தவங்கள நாந்தான் எங்க கூட்டியாந்து வூட்ல வச்சிருக்கேன் . அடிக்கடி எங்கயாவது போய்டும் , அப்பொறம் நா தான் தேடி கண்டுபுடிச்சி கூட்டியாருவேன் . இப்ப கொஞ்ச நாளா எங்கயும் போறதில்ல , வீட்டோடவே இருக்கு .சோறு குடுத்தா சாப்பிடும் , குடுக்கலன்னா அது பாட்டுக்கு மோட்டுவளைய பாத்துகிட்டு ஒக்காந்திருக்கும் . நம்ப வூடு கொல்லையில இருக்கறதால ஊர்ல இருக்குறவங்களுக்கு இவுங்க இங்க இருக்கறது தெரியல . வா வந்து பாரு , வந்தா ஓங்க்கூட கூட்டிட்டு போ . கடைசி காலத்துல ஓங் கூடவே இருக்கட்டும் , ஒரு வேளை மனசு தெளிஞ்சா ரொம்ப சந்தோசம் . "வீட்டுக்கு வா ".. நா யார்கிட்டயும் நீ இன்னார்னு சொல்லமாட்டன், கவலைப்படாத “ .
கண்களில் நீர்கோர்த்துக்கொள்ள பாலாவை அப்படியே கட்டி பிடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதான் சேது . காலம்தான் எவ்வளவு வலிமையானது ,மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது …. மாற்றிவைக்கிறது .
“ அப்பா தான் துக்கம் தாளாமல் போய்ட்டாரு , அம்மா மனநிலை சரில்லைனாலும் உசுரோட இருக்காங்களேன்னு சந்தோஷப்படு . வா.. வா.. போவலாம் . வீட்டுக்கு நீ சந்துரு வாவே வா.. எல்லாம் சரியா போய்டும் … “ .
இன்னமும் நடப்பதை நம்பமுடியாமல், பாலாவை வியப்புடன் பார்த்துக்கொண்டு அவன் கைகளை பிடித்துக்கொண்டு நின்றான் சேது .

நம் பாரம்பரிய அரிசி வகைகள் -- மறந்து போன கதை

நம் பாரம்பரிய அரிசியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள் …

கருப்பு கவுணி அரிசி --- மன்னர்கள் சாப்பிட்ட அரிசி . புற்று நோய் வராது . இன்சுலின் சுரக்கும் .

மாப்பிள்ளை சம்பா அரிசி --- நரம்பு , உடல் வலுவாகும் . ஆண்மை கூடும் .மலட்டு தன்மையை அகற்றக்கூடியது .

பூங்கார் அரிசி -- சுகப்பிரசவம் ஆகும் . தாய்ப்பால் ஊரும் . மாதவிடாய் சிக்கல் தீரும்

காட்டுயானம் அரிசி -- நீரிழிவு , மலசிக்கல் ,புற்று நோய் தீரும்

கருத்தக்கார அரிசி --- மூலம் , மலச்சிக்கல் , போன்றவை சரியாகும்

காலாநமக் அரிசி -- புத்தர் சாப்பிட்டதும் , மூளை , நரம்பு , ரத்தம் , சிறுநீரகம் சரியாகும்

மூங்கில் அரிசி -- மூட்டு வலி , முழங்கால் வலி சரியாகும்

அறுபதாம் குருவை அரிசி -- எலும்பு சரியாகும் .

இலுப்பைப்பூ சம்பா அரிசி -- பக்கவாதத்திற்கு நல்லது . கால்வலி சரியாகும்

தங்கச்சம்பா அரிசி -- பல், இதயம் வலுவாகும்

கருங்குறுவை அரிசி -- இழந்த சக்தியை மீட்டும் தரும் . கொடிய நோய்களை குணப்படுத்தும் .

கருடன் சம்பா அரிசி -- இரத்தம் , உடல் , மனம் சுத்தமாகும்

கார் அரிசி --தோல் நோய் சரியாகும்

குடை வாழை அரிசி -- குடல் சுத்தமாகும்

கிச்சிலி சம்பா அரிசி -- இரும்பு சத்து , சுண்ணாம்பு சத்து அதிகம் .

நீலம் சம்பா அரிசி -- இரத்த சோகை நீங்கும்

சீரகச் அம்பா அரிசி -- அழகு தரும் , எதிர்ப்பு சக்தி கூடும்

தூய மல்லி அரிசி -- உள் உறுப்புகள் வலுவாகும் .

குழியடிச்சான் அரிசி -- தாய்ப்பால் ஊரும்

சேலம் சன்னா அரிசி -- தசை , நரம்பு , எலும்பு வலுவாகும்

பிசினை அரிசி -- மாதவிடாய் , இடுப்பு வலி சரியாகும்

சூரக்குறுவை அரிசி -- பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்

வாளால் சம்பா அரிசி -- சுகப்பிரசவம் ஆகும் . பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் , இடுப்பு வலுவாகும் . ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்

வாடன் சம்பா அரிசி -- அமைதியான மனம் , தூக்கம் , நல்ல உடல் நலம் ஏற்படும் .

ஆறு மனமே ஆறு

கண்ணதாசன் பாடலொன்று "ஆறு மனமே ஆறு "என்று துவங்கும் . ஆண்டவன் கட்டளை படத்த்தில் இடம் பெற்றது . இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது , கண்டிப்பாக இருக்கிறது . இந்த பாடலில் எட்டி திருக்குறளை ஒரே பாடலில் கண்ணதாசன் எழுதி உள்ளார் .

பாடலையும் , தொடர்புடைய திருகுறையும் கீழே பார்ப்போம் .

பாடல் :

ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும்
வகைக்கு தெய்வத்தின்
கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே
செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை
பொன்னாகும் வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

உண்மையை சொல்லி
நன்மையை செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் பொது பணிவு
கொண்டால் உயிர்கள்
உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

ஆசை, கோபம் களவு
கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித உருவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள
மனம் உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த
மனது ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்

மேற்கோள் காட்டப்பட்டுள்ள திருகுறள்கள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண் டனைத்து இவ்வுலகு

உணமையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிரிகள் உன்னை வணங்கும்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது

நிலைத்த திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் .

கண்ணதாசன் -- தனது பாடல்களில் திருக்குறளையும் எளிய முறையில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவு . இறைவன் தமிழ் மொழிக்கு அளித்த ஈடிணையில்லாக் கவிஞன் .

எதிரும் புதிரும்

இரவு என்பது …

இனிமையின் மாரு பெயர்
அமைதி என்று
அகராதி கூறுது
வாழ்க்கையின் பாதி
தூங்கி கழிக்குது
மனித சாதி …

பகல் என்பது ..

இரைச்சல்களின் பிறப்பிடம்
அமைதியை அழித்து
புழுதியை அணிந்து
நகரும் மணித்துளிகள் ..
இரண்டையும் இரசிக்க
தெரியாத மனித பதர்கள்..