சொல் விளையாட்டு ...
இரண்டு கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கு ஒரே பதிலைச் சொல்லுமாறு தமிழில் ஒரு சொல் விளையாட்டு உண்டு .
சான்றாக " தேர் ஓடுவது எதனால் ?" " தெருவை மெழுகுவது எதனால் ? " என்ற இரண்டு கேள்விகளுக்குமான ஒரே பதில்
"அச்சாணியால் , அச்' சாணியால் "என்பது .
தேர் ஓடுவது அச்சாணியால் , தெருவை மெழுகுவது அச்-சாணியால் என்ற பதில் விளக்கம் கிடைக்கும் .
" நீ வசிக்கும் ஊர் எது ?" , " உன் காலில் காயம் வந்தது எப்படி ? " என்ற இரு கேள்விகளுக்கு ஒரே பதில் .. " செங்கல்பட்டு " என்பது .
" சாம்பார் மணப்பதேன் ?" , " உடல் நலிவதேன் " என்ற இரு வினாக்களுக்கும் ஒரே பதில் " பெருங் காயத்தால் " என்பது .
இன்று ஆங்கில வழிக்கு கல்வி பெருகிவிட்டதாலும் , தமிழை ஏதோ கடமைக்கென்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் நினைத்து கற்பிப்பதாலும் இன்றைய பிள்ளைகளுக்கு பெரும்பாலும் தமிழ் புலமையும் ஆர்வமும் குறைந்துவிட்டது . அவர்கள் பெரும்பாலும் மனனம் செய்து படித்து கடந்து விடுகிறார்கள் . இந்த செயல் மிகவும் ஆபத்தானது ,எதிர்கால சந்ததியை , தமிழ் மொழியை அழிக்கக்கூடிய செயல் என்பதை நம்மை அறியாமல் நாம் செய்துகொண்டிருக்கிறோம் . இத்தகைய சொல்விளையாட்டுகள் குழந்தைகளின் தமிழறிவையும் , சிந்தனைத்திறனையும் , ஆர்வத்தையும் , தமிழில் புலமையையும் ஒரு சேர வளர்க்கும் . பெற்றோர்களே சிந்தியுங்கள் ... தாய்மொழி வழி கேள்வி சிறந்த சிந்தனையாளனை வளர்த்தெடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .