7.24.2020

ஐங்குறுநூறு --- சில தகவல்கள்

ஐங்குறுநூறு -- எட்டுத்தொகை என் வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று .இதில் உள்ள பாடல்கள் சங்ககாலத்தை சேர்ந்தவை . இது மூன்றடி சிற்றெல்லையும் ஆறடி பேரெல்லையும் கொண்டது ஆகும் .ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் . குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை . ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன .

ஐங்குறுநூறில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன . இவற்றை தொகுக்க உதவும் பாடலும் பிரிவுகளும்
மருதத் திணைப் பாடல்கள் 100 -- ஓரம்போகியார்

நெய்தல் திணை பாடல்கள் -- 100 அம்மூவனார்

குறிஞ்சித் திணை பாடல்கள் -- 100 கபிலர்

பாலைத் திணை பாடல்கள் -- 100 --ஓதலாந்தையார்

முல்லைத் திணை பாடல்கள் -- 100 -- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

தொகுப்பித்தவர் -- யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

நூலின் அமைப்பு :

நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அல்லது அப்பாடலைகளில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ தனித்தனி பெயர்கள் பெற்றன .
வேட்கைப்பத்து , வேழப்பத்து ,நெய்யோப்பத்து , கள்வன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து , தோழி வற்புறுத்தப்பத்து , செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும்பெயர் பெற்றன . தொண்டிப்பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது . அன்னாய் பத்து ,சொல்லாட்ட்சியும் ,பொருளாட்ச்சையும் பொருந்தியது .

விலங்கு பறவைகளை கருப்பொருளாகக் கொண்டு குரக்குப்பத்து , கேழற்பத்து , மயிற்பத்து , கிள்ளைப்பத்து ஆகிய பெயர்களும் அமைந்துள்ளன . உள்ளுறை , உவமை , இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ளன . குறைந்த அளவிலான அடிகளைக் கொண்டிருந்தாலும் இப்பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல் , கரு ,உரி ஆகிய மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளன .

சுவைகளில் எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நூலை பிற்காலத்தில் ழிந்துபோகும் நிலையை எய்தியபோது பல சுவடிகளை சோத்தித்து தற்கால தமிழருக்கு பயன்படும் வகையில் 1903 ஆம் ஆண்டு முதன் முதலாக பதிப்பித்து வெளியிடப்பட்டது .

வாலிழை பாகத்து ஒருவன் என்ற சிவபெருமான் பாடலை கடவுள் வாழ்த்திய பாட்டாக எழுதி சங்ககாலத்திலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு பின்னர் சேர்க்கப்பட்டது இந்த பாடலை எழுதியவர் பெருந்தேவனார் ஆவார் . உண்மையில் கடவுள் வாழ்த்து பாடல் ஐங்குறுநூறு பாடல் காலத்தில் எழுதப்பட்டதல்ல .

அந்த பாடல் இதோ

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தான் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

இந்த பாடல் இறைவனின் விரிவாகத் தன்மையை ஒன்று , இரண்டு மூன்று என்று எண்ணிக்காட்டுகிறது .அவன் ஒருவன் நீலநிரப் பெண்ணைத் தன பாகத்தில் வைத்துக் கொண்டிருப்பவன் . அதனால் அவனுக்கு ஆண் - திருவடி , பெண் - திருவடி என்று இரண்டு திருவடிகள் . இரண்டும் இருவகைத் தாள் (முயற்சி) . இந்த இருவகை முயற்சியினால் மூன்று வகையான உலகங்களும் தோன்றின . அவை மேல், இடை , கீழ் - என்பன மூவகை உலகங்கள் .

பேச்சு தமிழ் -- சில விளக்கங்கள் !


பேச்சு தமிழில் நாம் அன்றாடம் அடுக்கு தொடர் போல பயன்படுத்தும் சில வார்த்தைகளை நாம் ஊடுருவிப் பார்த்ததில்லை அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுகிறோம் . ஆனால் உண்மையில் அந்த சொற்களுக்கு ஆழமான பொருள் இருக்கிறது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவர் . நமக்கே தெரியாதது போது நாம் எப்படி நம் குழந்தைகளுக்கு விளக்கப்போகிறோம் என்பது நம் முன் இருக்கும் பெரிய கேள்வி . கீழே சில தொடர்வார்த்தைகளையும் அதன் பொருளையும் கொடுத்துள்ளேன் . தமிழ் எவ்வளவு அழகான ஆழமான , பொருள் பொதிந்த மொழி என்பது இதிலிருந்து விளங்கும் .

அந்தி சந்தி

அந்தி -- மாலைக்கும் இரவுக்கும் இடையில் உள்ள பொழுது

சந்தி -- இரவுக்கும் காலைக்கும் இடையில் உள்ள விடியல் பொழுது

அக்குவேர் ஆணிவேர்

அக்குவேர் -- செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்

ஆணிவேர் -- செடியின் கீழ் ஆழமாக செல்லும் உறுதியான வேர்

குண்டக்க மண்டக்க

குண்டக்க -- இடுப்பு பகுதி

மண்டக்க -- தலைப் பகுதி

சிறுவர்கள் கால்பக்கம் , தலைப்பக்கம் பார்க்காமல் தூங்குவார்கள் .அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி மாறி இருத்தலே குண்டக்க மண்டக்க என்பதற்கு பொருள் .

அரை குறை

அரை -- ஒரு பொருளில் சரி பாதி அளவு

குறை -- அந்த சரி பாதியளவில் குறைவாக உள்ளது குறை .

உதாரணம் -- அரை குறை வேலை

அக்கம் பக்கம்

அக்கம் -- தன் வீடும் தான் இருக்கும் இடமும்

பக்கம் -- பக்கத்து வீடும் பக்கத்தில் உள்ள இடமும்

கார சாரம்

காரம் -- உறைப்புச்சுவை .

சாரம் சார்ந்தது

*காரம் சார்ந்த பிற சுவைகள் )

இசகு பிசகு

இசகு -- இயல்பு தெரிந்தும் ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்

பிசகு -- தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்

இடக்கு முடக்கு

இடக்கு -- எள்ளி நகைத்தும் , இகழ்ந்தும் பேசுதல்

முடக்கு -- கடுமையாக எதிர்த்தும் தடுத்த்தும் பேசுதல்

ஆட்டம் பாட்டம்

ஆட்டம் -- தாளத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ ஆடுவது

பாட்டம் -- ஆட்டத்திற்கு பொருந்தியோ / பொருந்தாமலோ பாடுவது

அலுப்பு சிலிப்பு

அலுப்பு -- உடலில் உண்டாகும் வலியும் குடைச்சலும்

சலிப்பு -- உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும் சோர்வும்

தோட்டம் துரவு / தோப்பு துரவு

தோட்டம் -- செடி , கொடி கீரை பயிரிடப்படும் இடம்

தோப்பு -- மரங்களின் தொகுப்பு

துரவு -- கிணறு

காடு கரை

காடு -- மேட்டு நிலம் (முல்லை )

கரை -- வயல் - நிலம் (மருதம் நன்செய் , புன்செய் }

காவும் கழனியும்

கா -- சோலை

கழனி -- வயல்

மருதம் சார்ந்த நிலப்பகுதி

நத்தம் புறம்போக்கு

நத்தம் -- ஊருக்குப் பொதுவாகிய மந்தை . ஊருக்குப் பக்கத்தில் இருக்கும்

புறம்போக்கு -- ஆடு மாடு மேய்வதற்காக அரசு ஒதுக்கிய புல்நிலம் -- ஊர் கடந்து தூரத்தில் இருக்கும்

பழக்க வழக்கம்

பழக்கம் -- ஒருவர் ஒரு செயலை பலகாலம் செய்து வருவது

வழக்கம் -- பலர் ஒரு செயலைப் பல காலம் கடைப்பிடித்தது வருவது (மரபு )

சத்திரம் சாவடி

சத்திரம் -- இலவசமாக சோறு போடும் இடம் --விடுதி

சாவடி -- இலவசமாக தங்கும் இடம் - விடுதி

நொண்டி நொடம்

நொண்டி -- காலில் அடிபட்டோ அல்லது அடிபடாமலோ , ஏதோ ஒரு குறையால் நடக்க முடியாமல் குறைபாட்டுடன் நடப்பவர் அல்லது நடக்க முடியால் இருப்பவர் .

நொடம் -- கை முடங்கி அதனால் கையின் செயல் அற்றவர் (நுடம் , முடம் )

பற்று பாசம்

பற்று -- நெருக்கமாக உறவாடி இருத்தல்

பாசம் -- பிரிவில்லாமல் சேந்தே இருத்தல் .

ஏட்டிக்குப் போட்டி

ஏட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயல் . ஏடல் -- விருப்பம்

போட்டி -- விரும்பும் பொருள் அல்லது செயலுக்கு எதிராக வரும் ஒன்று .

கிண்டலும் கேலியும்

கிண்டல் -- ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல் (கிண்டி தெரிந்து கொள்ளுதல் )

கேலி -- எள்ளி நகையாடுதல்

ஒட்டு உறவு

ஒட்டு -- இரத்த சம்பந்தம் உடையவர்கள் (தாய் தந்தை , உடன் பிறந்தவர்கள் , மக்கள் }

உறவு -- பெண் கொடுத்த அல்லது பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள் .

பட்டி தொட்டி

பட்டி -- மிகுதியாக ஆடுகள் வளர்க்கப்படும் இடம் (ஊர் )

தொட்டி -- மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம் -- ஊர்

கடை கண்ணி

கடை -- தனித்தனியாக அமைந்த வணிக நிலையம்

கண்ணி -- தொடர்ச்சியாக கடைகள் அமைந்த கடைவீதி

பேரும் புகழும்

பேரும் --- வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும்

புகழ் -- வாழ்விற்கு பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை

நேரம் காலம்

நேரம் -- ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைந்த பொழுது .

காலம் -- ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக்கொள்ளும் கால அளவு நிலை

பழி பாவம்

பழி -- நமக்கு தேவையில்லாத பொருந்தாத செயலைச் செய்ததால் இப்பிறப்பில் உண்டாகும் பழிப்பு

பாவம் -- தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள் .

கூச்சலும் குழப்பமும்

கூச்சல் -- துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும் அவல ஒலி (ஓலம்) , கூ --கூவுதல்

குழப்பம் -- அவள் ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல் ..

நகை நட்டு
நகை -- பெரிய அணிகலன்களைக் குறிக்கும் (அட்டியல் , ஒட்டியாணம் , சங்கிலி )

நட்டு -- சிறிய அணிகலன்களைக் குறிக்கும் . திருகு உள்ள தோடு , காப்பு , கொப்பு )

பிள்ளை குட்டி

பிள்ளை --- பொதுப் பெயர் . இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும்

குட்டி -- இது பெண் குழந்தையைக் குறிக்கும்

பங்கு பாகம்

பங்கு -- கையிருப்பு . பணம் , நகை , பாத்திரங்களைபிரித்தல் (அசையும் சொத்து )

பாகம் -- வீடு ,மனை நிலா புலன்களைப் பிரித்தல் (அசையா சொத்து )

வாட்ட சாட்டம்

வாட்டம் -- வளமான தோற்றம் , வாளிப்பான உடல் , அதற்கேற்ற உயரம் .

சாட்டம் -- உடல் வளமுள்ள கணம் . தோற்றப் பொலிவு

காய் கறி

காய் -- காய்களின் வகைகள்

கறி -- சைவ உணவில் கறிக்கு பயன்படும் கிழங்கு வகைகளும் கீரை வகைகளும்

கால்வாய் வாய்க்கால்

கால்வாய் -- குளத்திற்கு தண்ணீர் வரும் கால் (பாதை)

வாய்க்கால் -- குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால் (பாதை ) . பாதை என்பது நீர் வழிப் பாதையைக் குறிக்கும் .

ஈவு இரக்கம்

ஈவு -- ஈதல் , கொடை வழங்குதல்

இரக்கம் -- அருள் . பிற உயிர்களின் மேல் பரிவு கொள்ளுதல்

பொய்யும் புரட்டும்

பொய் -- உண்மை இல்லாததை சொல்லுதல்

புரட்டு - ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி , உண்மையைப் போல் நம்பும் படியாக கூறுவது

சூடு சொரணை

சூடு -- ஒருவர் தாக்காத சொல்லை ப் பேசும்போது / தாக்காத செயலைச் செய்யும் போது நமக்கு ஏற்படும் மனக்கொதிப்பு ( மனவெதுப்பு , எரிச்சல் )

சொரணை -- நமக்கு ஏற்படும் மான உணர்வு

பட்டம் விருது

பட்டம் -- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றில் படித்து பெறுவது . பெயருக்குப் பின்னால் இடம் பெறும் .
விருது -- தகுதி அடிப்படையில் வழங்கப்படுவது . இது பெயருக்கு முன்னால் இடம் பெறும் .

நன்றி !

வடமொழிமயமான தமிழ்நாட்டு ஆறுகளின் பெயர்கள் !


பண்டைத் தமிழகம் இன்றைய ஆந்திரத்தின் கிருட்டினா நதி வரைக்கும் பரவி இருந்தது . அந்த காலத்தில் தமிழறிந்த பகுதிக்குள் பாய்ந்த ஆறுகள் அனைத்திற்கும் தமிழ் பெயர்களே இருந்தன . பிற்காலத்தில் வடமொழியின் ஆதிக்கத்தால் அந்த பெயர்கள் படமொழிப் படுத்தப்பட்டு பின்னர் அதுவே நிலைத்துவிட்டது .

கிருஷ்ணா ஆற்று நீர் கரிசல் நிலத்தில் பாய்ந்து வருவதால் கரிய நிறத்தோடு இருக்கும் . அதை உணர்த்தும் விதமாக கண்ணனின் நிறத்தோடு தொடர்புபடுத்தி கிருஷ்ணா நதி என்ற வடமொழி பெயர் நிலைத்தது . உண்மையான தமிழ் பெயர் " கரும்பெண்ணை " என்பதே . பெண்ணை என்றால் நல்ல நீர் பெருக்குடைய ஆறு என்று பொருள் .

காவிரி ஆற்றைக் " காவேரி " என்று வழங்குவதும் உண்டு . இகரம் , ஏகரம் ஆகும் இசைத்தமையால் வி என்பது வே என்று ஆகிவிட்டது . கா என்றால் சோலை , விரி -- விரித்தல் . செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்து செல்லுபவள் என்று பொருள் . இன்னொரு பெயர் " பொன்னி " .

தாமிரபரணி என்னும் ஆற்று பெயரும் வடமொழி தான் . அதன் தமிழ் பெயர் " தண்பொருநை ஆறு என்பதுவே . பாரதியார் தன்னுடைய பாடலில் காவிரி , தென்பெண்ணை , பாலாறு தமிழ் கண்டதொரு பொருநை என்று குறிப்பிட்டிருக்கிறார் .. தண் - தண்மை என்றால் குளிர்ச்சி என்று பொருள் . மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி பாய்வதால் தண்பொருநை ஆறு எப்போது குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் இந்த பெயர் வந்தது .

வைகை ஆற்றின் தூய பெயர் ' வையை என்பதே . வையைசூழ்ந்த வளங்கெழு வைப்பின் என்கிறது புறநானுறு . நாளடைவில் இது வைகை என்று மருவி வழங்குகிறது .

கொசஸ்தலை ஆறு -- திருவள்ளூர் மாவட்டத்தில் ஓடுவது . இதுவம் வாதமிழி பெயரே . உண்மையான சரியான பெயர் " கொற்றலை " என்பதே . சிறு சிறு அலைகள் மொழி விளையாடும் ஆறு என்ற பொருளில் அமைந்தது .

பவானி என்பதும் வடமொழி பெயரே . வானி ஆறு என்பதே சரியான தமிழ்ப் பெயர் . அது எப்படியோ காலப்போக்கில் பவானி என்று திரிந்து விட்டது . " சாந்து வரு வானி நேரினும் ' என்கிறது பதிற்றுப்பத்து (86 ) .இன்றைக்கும் பவனி ஆற்றங்கரையில் கீழ் பவானி , மேல் பவானி , பூவானி ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன .

இது பெரிய வானி ஆறு . இன்னொன்று சிறிய வானி ஆறு . இதைத்தான் "சிறுவாணி " என்று பிழையாக இன்று எழுதுகிறார்கள் .

அமராவதி ஆற்றின் உண்மையான தமிழ் பெயர் "ஆன்பொருநை " ஆவினங்கள் மேய்ந்து திகழுமாறு பாயும் ஆறு என்ற பொருளில் அமைந்தது ஆன்பொருநை .

பேரியாறு என்ற ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பாய்கிறது . அதுதான் மருவிப் போய் " பெரியாரு " என்கிறார்கள் . பேரி என்றால் முரசு . வெற்றி முரசு போல ஆர்பரித்தபடி பாயும் ஆறு என்ற பொருளில் பெரியாரு எனப்பட்டது .

அடையாறில் வெள்ளப்பெருக்கின் போது தேனடைகள் மிதந்து சென்றிருக்கின்றன , அதனால் அப்பெயர் வந்தது . அடையாறு என்பதை இன்று " அடையார் " என்று பிழையாக எழுதுகிறார்கள் .

கூவம் என்றால் கிணறு . வழியோரங்களில் கிணற்று நீர் வளத்தினைப் பெருக்கியபடி பாய்ந்ததால் கூவம் ஆறு என்ற பெயர் ஏற்பட்டது . அனால் இன்று கூவம் என்றால் கழிவு நீர் என்பது போல் பொருள் கொள்ளப்படுவது வருந்த தக்கது .

நன்றி ! கவிஞர் திரு மகுடேசுவரன் அவர்கள் .

வள்ளுவன் சொன்ன கவரிமா , கவரிமான் ஆனது எப்படி ?


வள்ளுவன் சொன்ன கவரிமா , கவரிமான் ஆனது எப்படி ?

கவரிமான் என்பது மான் இனமே அல்ல . அதன் உண்மையான பெயர் கவரிமா என்பதே . கவரிமா என்பது தமிழ்நாடு விலங்கே அல்ல .இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது , அதுவும் எருமை மாடு வகையை சார்ந்தது . இதையே நமது மக்கள் காலப்போக்கில் கவரி மான் என்று குழப்பிக் கொள்கிறார்கள் .

கவரி மான் எங்கு வசிக்கிறது ? முடி விழுந்தாள் தற்கொலை செய்துகொள்ளுமா ? எப்படி தற்கொலை செய்து கொள்ளும் ? என்ற கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா ?

" மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் " குறள் 969 .


கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்துகொள்ளும் அதே போல மானம் மிக்கவர்கள் , தம் பெருமைக்கு இழுக்கு வரும் பொது உயிர் வாழமாட்டார்கள் என்பது பொதுவாக இந்தக் குரலுக்கு கூறப்படும் விளக்கம் . ஆனால் அப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறியியலில் தங்கள் இல்லையே ? இந்த குறளைக் கவனமாக படியுங்கள் மீண்டும் ஒருமுறை . கவரி மா என்றே குறிப்பிடுகிறார் , கவரிமான் என்றல்ல . " கவரிமா என்ற விலங்கைத் தான் நம் மக்கள் காலப்போக்கில் பேச்சுவாக்கில் " கவரிமான் " என்று மாற்றிவிட்டனர் பொருள் புரியாமல் .

புறநானுற்றில் இருந்து ஒரு பாடல் , அதில் இது பற்றிய எ குறிப்பு இருக்கிறது .

" நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வடதிசை யதுவே வான்
தோய் இமயம் "

இமயமலையில் கவரிமா என்ற விலங்கு நரந்தை என்றும் புல்லை உண்டு தன்துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள் . அதாவது இது தமிழ் நட்டு விலங்கல்ல .இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு . கவரி மா என்பது மான் வகையல்ல , எருமை மாட்டு வகையைச்சார்ந்தது என்பது இரண்டாவது வியப்பு .வள்ளுவர் சொன்னது இதைத்தான் .

இந்த கவரிமா பற்றி பதிற்றுப்பத்து என்ற நூலிலும் குறிப்புகள் உள்ளன . முடி சடை போல தொங்கக்கூடிய விலங்குதான் கவரிமா . இதன் முடியை எடுத்து செயற்கை முடியை உருவாக்குவது வழக்கம் . கவரி என்ற சொல்லில் இருந்தான் சவரி / சவுரி என்ற இன்றைய சொல் உருவானது . மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல் .

இந்த குறளுக்கு என்ன பொருள் ?

பனிப்பகுதியில் வாழும் அவரிமாவுக்கு அதன் முடி கடுகுக்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது . அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ , மனிதர்களால் வெட்டப்பட்டாலோ குளிர் தாங்க முடியாமல் இறந்துவிடும் என்பதே அதன் உண்மையான பொருள் ஆகும் .

குறளின் பொருள் பிற்காலத்தில் திரிக்கப் பட்டுவிடாது என்பது வருத்தமான செய்தி . இனியாவது இந்த குறளை சரியான பொருளறிந்து பயன்படுத்துவோமாக .

நன்றி !

7.14.2020

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் - 1

தற்கால தமிழ்ப் படைப்புலகின் தலை சிறந்த எழுத்தாளர் திரு எஸ் ரா . புதினங்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் , நாடகங்கள் , குழந்தைகளுக்கான ஆக்கங்கள் , திரைக்கதை , திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதோடு தனது உரைகள் , பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள் , திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருகிறார் .
சஞ்சாரம் என்னும் இவருடைய படைப்புக்கு 2018 சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது .

வாழ்க்கைக் குறிப்பு :
விருது நகர் மாவட்டம் மல்லாங்கிணற்றை சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம் , மங்கையர்க்கரசி என்போராவர் . இவரது தந்தை வழி தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர் . தாய் வழித் தாத்தா திராவிட இயக்கத்தில் பற்றுடையவர் . இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள் , சமூகச் சிந்தனைகளைப் படித்தும் , பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார் . ஆங்கில இலக்கியம் பயிறன்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார் . தற்சமயம் மனைவி சந்திரப்ரபா , குழந்தைகள் ஹரிப்ரசாத் ,ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார் .

இலக்கியச் செயற்பாடு :

இவரது முதல் கதையான " பழைய தண்டவாளம் " கணையாழியில் வெளியாகி இருக்கிறது . 1984 இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல் வடிவம் பெற்றுள்ளன . ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய
துணை எழுத்து
கதாவிலாசம்
தேசாந்திரி
கேள்விக்குறி

ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டிய பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன . இவரது சிறுகதைகள் ஆங்கிலம் , டச்சு , பிரெஞ்சு , கன்னடம் , வங்காளம் , இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .

அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்களை வெளியிட்டு இருக்கிறார் .

" இலக்கியத்தை எல்லா அர்த்தத்தில் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ரா என்று ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார் .
' ஜெயகாந்தன் போல .. எஸ் .ரா தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம் " என்று மனுஷ்யபுத்திரன் சொல்லி இருக்கிறார் .

புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் ந. முருகச பாண்டியன் , எஸ்.ரா வின் நெடுங் குருதி , யாமம் ஆகிய இரு நாவல்களிலும் கதை சொல்லலில் தொடர்ச்சியுறு தன்மை ஈர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது " என்று கருத்துரைத்துள்ளார் .

விருதுகள் :

வாழ்நாள் சாதனையை பாராட்டும் முகமாகக் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011 ஆம் ஆண்டுக்கான இயல் விருது டொராண்டோவில் வழங்கப்பட்டது . இதே இலக்கியத் தோட்ட அமைப்பு 2007 இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது .

சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்ய அகாடமி யம் இனைந்து ஆண்டுக்கு எட்டு இந்தியா மொழிகளில் சிறநத இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கின . 2010 ஆம் ஆண்டுக்கான தாகூர் விருது யாமம் புதினத்துக்கு வழங்கப்பட்டது .

;பழனி வாழிய உலக னால நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003 ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது .

இவர் எழுதிய அரவான் என்னும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடகம் (உரைநடை , கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது .

இவர் பெற்றுள்ள பிற விருதுகள்

தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் விருது -- 2001

ஈரோடு சி கே கே அறக்கட்டளை வழங்கிய சி கே கே இலக்கிய விருது 2008

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011

படைப்புகளின் பட்டியல் :

உப பாண்டவம் 2000

நெடுங்குருதி -- 2003

உறுபசி -- 2005

யாமம் -- 2007

துயில் -- 2010

நிமித்தம் -- 2013

சஞ்சாரம் -- 2014

இடக்கை -- 2016

பதின் -- 2017

ஒரு சிறிய விடுமுறைக் கால காதல் கதை 2019

சிறுகதைத் தொகுப்புகள்

வெளியில் ஒருவன் , சென்னை புக்ஸ்

காட்டின் உருவம் அன்னம்

எஸ்.ரா கடகிகள் பாகம் 1 , 2 மற்றும் 3

நடந்து செல்லும் நீரூற்று 2006

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை 2008

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது 2010

நகுலன் வீட்டில் யாருமில்லை 2009

புத்தனாவது சுலபம் 2011

தாவரங்களின் உரையாடல் 2007

வெயிலை கொண்டு வாருங்கள் 2001

பால்ய நதி 2003

மழைமான் 2012

குதிரைகள் பேச மறுக்கின்றன 2013

காந்தியோடு பேசுவேன் 2013

என்ன சொல்கிறாய் சுடரே 2015

கட்டுரைத் தொகுப்புகள் :

விழித்திருப்பவனின் இரவு 2005

இலைகளை வியக்கும் மரம் 2007

என்றார் போர்ஹோ 2009

கதா விலாசம் 2005

தேசாந்திரி 2006

கேள்விக் குறி 2007

துணை எழுத்து 2004

ஆதலினால் 2008

வாக்கியங்களில் சாலை 2002

சித்திரங்களின் விசித்திரங்கள் 2008

நம் காலத்து நாவல்கள் 2008

காற்றில் யாரோ நடக்கிறார்கள் 2008

கோடுகள் இல்லாத வரைபடம் - உலகை சுற்றிய பயனாக கட்டுரைகள்

மலைகள் சப்தமிடுவதில்லை 2009

வாசகபர்வம் 2009

சிறிது வெளிச்சம் 2010

கான் என்றது இயற்கை 2010

செகாவின் மீது பனி பெய்கிறது 2010

குறத்தி முடுக்கின் கனவுகள் 2010

என்றும் சுஜாதா 2011

கலிலியோ மண்டியிடவில்லை

சாலினுடன் பேசுங்கள்

கூழாங்கற்கள் பாடுகின்றன

எனதருமை டால்ஸ்டாய்

ரயிலேறி கிராமம்

ஆயிரம் வண்ணங்கள்

பிக்காஸோவின் கோடுகள்

இலக்கற்ற பயணி

திரைப்படம் குறித்த நூல்கள் :

பதேர் பாஞ்சாலி - நிதர்சனத்தின் பதிவுகள்

அயல் சினிமா

உலக சினிமா

பேசத்தெரிந்த நிழல்கள்

இருள் இனிது ஒளி இனிது

பறவைக் கோணம்

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்

நான்காவது சினிமா

குற்றத்தின் கண்கள்

காட்சிகளுக்கு அப்பால்

குழந்தை நூல்கள் :

ஏழு தலைநகரம் கதை

கால் முளைத்த கதைகள்

நீள நாக்கு

பம்பாழாபம்

எழுத தெரிந்த புலி

காசு கள்ளன்

தலையில்லாத பையன்

எனக்கு ஏன் கனவு வருது

வானம் வாலிபாலே நீள நாக்கு வாலிபாலே

அக்காடா

சிரிக்கும் வகுப்பறை

வெள்ளை ராணி

அண்டசராசம்

சாக்கிரட்டீசின் சிவப்பு நூலகம்

கார்ப்பனை குதிரை

படிக்க தெரிந்த சிங்கம்

மீசை இல்லாத ஆப்பிள்

பூனையின் மனைவி

இறகை விரிக்கும் மரம்

உலகின் மிகச்சிறிய தவளை

எலியின் பாஸ்வோர்ட்

உலக இலக்கிய பேருரைகள்

ஆறிரத்தொரு அரேபிய இரவுகள்

ஷேசபியரின் மேக்பெத்

ஹெமிங்க்வின் கடலும் கிழவனும்

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டையும்

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா

பாஷோவின் ஜென் கவிதைகள்

வரலாறு

எனது இந்தியா

மறைக்கப்பட்ட இந்திய

நாடகத் தொகுப்புகள்

அரவான்

சிந்துபாத்தின் மனைவி

சூரியனை சுற்றும் பூமி

நேர்காணல் தொகுப்புகள்
எப்போதுமிருக்கும் கதை

பேசிக் கண்டாந்த தூரம்

மொழிபெயர்ப்புகள்

நம்பிக்கையின் பரிமாணங்கள்

ஆலீஸின் அற்புத உலகம்

பயனாய் படாத பாதைகள்

தொகை நூல்கள்

அதே இரவு , அதே வரிகள்

வானெங்கும் பறவைகள்

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வந்த நூல்கள்

நத்திங் பட் வாட்டர்

விரலிங் ஸ்வார்லிங் ஸ்கை

திரைப்படங்கள் -- பணியாற்றிய

சண்டைக் கோழி

பாகுபலி

ஆல்பம்

பாபா

தாம் தூம்

பீமா

உன்னாலே உன்னாலே

கர்ண மோட்சம்

மோதி விளையாடு

சிக்கு புக்கு

அவன் இவன்

யுவன் யுவதி

தாராமணியில் கரப்பான் பூச்சிகள்

மற்றவன்

கொக்கரக்கோ

வீட்டுக்கணக்கு

பீடா றன்

வாழ்க்கை

திங்கள்

ஒரு கோப்பை தண்ணீர்

இரு குமிழிகள்

கிளீன் போல்ட்

7.10.2020

சந்துரு என்கிற சேது -- சிறுகதை 

அந்த தெருவில் ஏறக்குறைய நாற்பது வீடுகள் இருந்தன .நடுநாயகமாக இருந்த அந்த வீடு இடிந்து சிதைந்து போயிருந்தது . வீட்டின் முன்னால் இருந்த அந்த வேப்ப மரம் மட்டும் கிளைகளோடு விரிந்து பரந்து தலை நிமிர்ந்து கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது . பார்த்து பத்து வருஷமாகிப்போனாலும் அது அவனை உடனே இனம் கண்டுவிட்டது போல தென்றலை அவன் மேல் வீசியடித்து ஸ்பரிசித்தது . இன்னமும் அதன் பாசம் அப்படியே இருந்தது கண்டு அவன் நெகிழ்ந்து போனான் . அந்த மரத்தை கொஞ்சநேரம் கட்டிப் பிடித்தபடியே நின்றான் .
பல மாதங்கள் சவரம் செய்யப்படாத முகத்தோடும் கழுத்தில் தொங்கிய தலைமுடியோடும் அவன் இருந்தான் . கண்ணனுக்கு கருப்புக் கண்ணாடியும் தலைக்கு தொப்பியும் அணிந்திருந்தான் . தன்னுடைய அடையாளங்களை மறைத்து பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசப்பட்டு தெரிந்தான் . அவனை பார்த்தவுடனே அந்த ஊர்வாசிகளுக்கு தெரிந்துவிடும் அவன் அந்த ஊர் மனிதன் இல்லை என்பது .
“ யாருப்பா நீ ? ஒனக்கு என்ன வேணும் ... ரொம்ப நேரமா நானும் பாக்கறேன் இடிஞ்சிபோன அந்த வீட்டையே வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு நிக்கிறீயே... என்ன வேணும் ஒனக்கு ? “
அந்த பெரியவர் அதிகார தோரணையோடும் சந்தேக பார்வையோடும் கேள்விகளை அடுக்கினார் . அந்த கணீர் குரல் சேதுவை உலுக்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்திருந்தது . பெரியவரின் சத்தம் கேட்டு நான்கைந்து பேர் அங்கு கூடி விட்டனர் .
“ ஐயா … அது ஒண்ணுமில்ல …” சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ சும்மாதான் பார்த்தேன் “ என்றவன் மேலும் சமாளித்துக் கொண்டு பேச தொடங்கினான் . “ எம் பேரு சந்துரு , ஊரு செங்கிப்பட்டி ,சிங்கப்பூர்ல வேல பாக்கேன் . இந்த வீட்டு பையன் சேதுராமன் என்னோட சிநேகிதன் . ஆறு மாசத்துக்கு முன்னாடி போன் பண்ணி வேல வேணுமுன்னு கேட்டான் , இப்ப தான் ஏற்பாடு பண்ண முடிஞ்சுது . போன் பண்ணேன் , இந்த நம்பர் பயன்பாட்டில் இல்லன்னு வருது , போன வாரந்தான் இந்தியாவுக்கு வந்தன். அதான் பாத்துட்டுப் போவலாமுன்னு இங்க வந்தன் . இதுதானே அவங்க வீடு ? ஏன் இடிஞ்சிபோயிருக்கு ? என்னாச்சு … “ ஒரு வழியாக சொல்லிமுடித்தான் சேது .
“ என்னப்பா நீ … வெவரம் தெரியாத புள்ளையா இருக்கியே ? ஒனக்கு விஷயமே தெரியாதா ? அந்த சேது பய செஞ்ச வேலையால அவங்க குடும்பமே அழிஞ்சி போச்சி ...”
கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் கேட்டான் “ அப்புடி என்ன செஞ்சான் அவன் ? “ .
“அந்த சேது பய , பக்கத்துல இருக்கற காலனி பொண்ண இழுத்துகிட்டு ராத்திரியோட ராத்திரியா ஊற விட்டே ஓடிட்டான் . அவங்க அப்பா அம்மாக்கு ஒரே அவமானமாய் போய்டிச்சி . அவனோட அப்பா ரொம்ப நல்ல மனுஷன் , தல நிமிந்து நடந்தவர அந்த பாவி தலை குனிய வச்சுட்டான் . பாவம் ! ரொம்ப மனசொடிஞ்சி போயிட்டார் . ரொம்ப நாளா மனக்கஷ்டத்துல இருந்தவரு ஒரு நாள் திடீர்னு செத்துப் போய்ட்டாரு . அப்பொறம் ஊர்ல எல்லாருமா சேர்ந்து அவருக்கு சாங்கியமெல்லாம் செஞ்சி எடுத்து எரிச்சிட்டோம் …” .
அப்பாவின் இறப்பு செய்தி அவனை கலங்கடித்தது , அது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்ட அந்த நிலைக்கு தான் தான் காரணம் என்பதால் துக்கம் தொண்டையை அடைத்தது . தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவன் ரொம்பவே தடுமாறினான் . சோகம் அப்பிக்கொள்ள , முட்டிக்கொண்டு அந்த கண்ணீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டான் .
“ நீ… ஏம்பா கண் கலங்கற ...” என்ற அந்த பெரியவரின் கேள்விக்கு மற்றொரு பெரியவரே பதில் சொன்னார் “ அந்த தம்பி சேதுவோட ஸ்நேகிதன்னு சொல்லிச்சில்ல , அதான் அதால துக்கம் தாங்க முடியல போலருக்கு பாவம் ! . ஆனா அந்த சேது பய கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கியோ ஜாலியா இருக்கான் .”
“ அவன் ஏன் இங்க வரணும் ? தராதரம் தெரியாத பய ... வந்தா ஊருக்குள்ள நொழைய விட்ருவோமா ? தரங்கெட்ட வேலைய செஞ்சா இப்புடித்தான் தண்டன கெடைக்கிம் . பாவம் ! நல்ல மனுஷன் போய் சேந்துட்டாரு ... “ மற்றொரு பெரியவர் பேசிக்கொண்டேபோனார் .
கனத்த இதயத்தோடும் அடுத்து என்ன சொல்ல போகிறார்களோ என்ற பயத்தோடும் நடுங்கிய குரலில் கேட்டான் "சேதுவோட அம்மா ...?"
“ அட அது இன்னும் கொடுமப்பா ... மவன் ஓடிப் போனப்பவே ரொம்ப மனசு உட்டுட்டாங்க . ஒரே மவன் , எத்தினியோ கனவு இருந்திருக்குமுள்ள . பத்தா கொறைக்கி புருஷன் வேற போய் சேந்துட்டாரு . அந்த துக்கமும் சேந்துட்டதால அவுங்குளுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சி . கொஞ்ச நாள் அங்க இங்கன்னு சுத்திட்டு திரிஞ்சாங்க . இப்ப ரெண்டு மூணு வருஷமா ஆளையே காணும் . எங்க போனாங்க ,என்ன ஆனாங்கன்னு யாருக்கும் ஒன்னு தெரியலப்பா “ .
'அம்மாவுக்கு என்னாச்சு ? எங்க போயிருப்பாங்க ? எங்க போயி தேடறது ? வெளியில் விவரிக்க முடியாத அளவுக்கு சோகம் , கலங்கிப் போயிருந்தான் .
“ அதாம்பா அவுங்களுக்கு இப்படி ஆயிபோனதனால இந்த ஊடு ரொம்ப நாளா பூட்டி கெடந்துச்சி , போன மழையில இடிஞ்சி உழுந்துடுச்சி . ம்ம்ம் ... என்ன செய்ய ... “ அந்த பெரியவர் பெருமூச்சு விட்டார் .
“ ம்ம் … நல்ல புள்ளய பெக்கணும் . ஓடுகாலிய பெத்தா இப்புடிதான் ஆவும் . விதி யாரை வுட்டுது ? “ மற்றொரு பெரியவர் புலம்பினார் .
“அந்த பய எங்க இருக்கானு ஒனக்கு தெரியுமா தம்பி ? “ முதலில் பேசிய பெரியவர் கேட்டார் .
“ தெரியலீங்க … போனும் போவல, அட்ரசும் குடுக்கல . தேடிட்டே இருக்கேன் “
“ திருட்டு பய … உண்மைய சொல்ல மாட்டான் . அப்பாவ முழுங்கிட்டான், அம்மாவ புத்திஸ்வாதீனமில்லாதவளா சுத்த விட்ருக்கான் . இன்னும் என்ன பண்ணபோறானோ ? குடும்பமே நாசமாய் போய்டிச்சி . கண்டவள கை புடிச்சா இப்படித்தான் நடக்கும் “ குருக்கள் தன் பங்கிற்கு திட்டிக்கொண்டிருந்தார் .
விடை பெற்றுக்கொண்டு சந்துரு என்று சொல்லிக்கொண்ட அந்த சேது திரும்பி நடக்க தொடங்கினான் . ஒரு பொண்ண வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா ? நா பண்ண தப்புக்கு அம்மா அப்பாவுக்கு எதுக்கு பனிஷ்மென்ட் ? என்ன ஒலகம்டா இது ? . அம்மா எங்க இருப்பாளோ ? உயிரோட இருப்பாளா ? எங்க போயி தேடுவன் ? இன்னும் எத்தனை வருஷத்துக்கு இந்த சமூகம் இப்பிடியே இருக்கும் . பெத்தவங்கள காப்பாத்த முடியாத புள்ளையாயிட்டானே ... ஜனங்க மாறவே மாட்டாங்களா ...
இரண்டு தரப்பிலும் எதிர்ப்பு அதிகம் இருந்ததால் லலிதாவும் அவனும் ஒரு கோயிலில் மாலைமாற்றிக் கொண்டு வெளியூருக்கு போயி கொஞ்சகாலம் வாழலாம் என்று முடிவெடுத்தனர் . ஒன்றிரண்டு வருடங்கள் போனால் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்தனர் . எல்லாம் சரியான பிறகு பெற்றோரை அழைத்துக்கொண்டு பட்டணத்திலேயே செட்டிலாகலாம் என்று திட்டம் வைத்திருந்தனர் . ஆனால் ஊர் மாறவே இல்லை , அவனுக்கு எல்லாமே தப்பு தப்பாய் நடந்துவிட்டது .
இலக்கு இல்லாமல் நடந்து கொண்டிருந்தவனுக்கு சட்ரென்று ஒரு எண்ணம் அவனுக்குள் உதித்தது . லலிதா வீட்டுக்கு போயி பாக்கலாமா ? ஒரு முடிவுக்கு வந்தவனாய் காலனியை நோக்கி நடைபோட்டான் . அங்கொன்றும் இங்கொன்றுமாக நிலத்தின் அருகில் வீடுகள் இருந்தன . வீடுகள் என்று சொல்வதைவிட குடிசைகள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் . ஆங்காங்கே கொஞ்சம் பயிர் பச்சைகளும் மரம் மட்டைகளும் , ஆடு மாடுகளும் தென்பட்டன . பத்து வருடத்தில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்பது பார்த்த மாத்திரத்தில் பளிச்சென்று தெரிந்தது .
“ அம்மா இங்க சின்னசாமி வீடு ...? “ அவன் முடிக்குமுன் அந்த பெண்மணி பதில் சொன்னாள் .
“ அந்த ஓடுகாலி லலிதாவோட வூடா ? அந்த கடைசி வூடா ? “ . தெருவின் கடைசி வீட்டை காட்டினாள் .
தெருவின் கோடியிலிருந்த அந்த குடிசை வீட்டை அடைந்தான் . வீட்டின் அருகில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த வெள்ளை நிற முசு முசு நாய் மௌனம் காத்தது அவனுக்குள் பய கதிர்களை பாய்ச்சியது .
“ அம்மா ... அம்மா …. “ என்றான் .
லலிதாவின் அம்மா வெளியே வந்து வெத்தலை எச்சிலை துப்பிவிட்டு “என்ன “ என்றாள் அதிகாரமாக .
தான் சந்துரு, சேதுவோட நண்பன் என்று தொடங்கி முழு விவரமும் சொன்னான் .
“ அந்த நாய பத்தி பேசாத …. ஒன்னும் தெரியாத எம் பொண்ணு மனச கெடுத்து ஊரை விட்டே கூட்டிட்டு ஓடிட்டான் . மேல்சாதி காரனுவலாம் வந்து எங்க சாதி சனத்தலாம் அடி அடின்னு அடிச்சனானுவ . ஒரு குடுச வுடாம கொளுத்தி புட்டானுவ . இங்க இருந்த பொம்பள புள்ளவோல கண்டபுடி பேசி கைய புடிச்சசி இழுத்தானுவோ . அவுனுவோ அடிச்ச அடியில உழுந்த எம்புருஷன் இத்தனை வருஷமாயும் இன்னும் எழிந்திருக்கவே இல்ல . ஒண்ணுக்கு ரெண்டுக்கு எல்லாம் பாயிலேயே போய்கிட்டு கெடக்கார் . எந்தலையெழுத்து எல்லாத்தையும் அனுபவச்சிக்கிட்டு இன்னும் உசுரோட இருக்கேன் “ .
“ இங்க யார் கிட்டயும் எதுவும் கேட்காத . அவன் பேர சொன்னாலே அடிப்பாங்க . நீ கெளம்பு ,எங்கயாவது அவன பாத்தா ஊர் பக்கம் வந்துறாதுன்னு சொல்லு . இங்க வந்தா , அவங்க ஆளுங்களுக்கு முன்ன எங்க ஆளுங்களே அவங்க ரெண்டு பேரையும் வவுந்து போட்ருவாங்க “ .
இன்னும் சாதீயம் சூடு குறையாமல் கதகதப்பாய் இருப்பதை உணர்த்த அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான் .
மீண்டும் அம்மாவைப் பற்றிய நினைவுகள் அவனுள் முளைக்க ஆரம்பித்துவிட்டன . பதினைந்து இருபது நிமிட நடையில் பேருந்து நிலையம் வந்திருந்தான் . தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற சுரத்தையே இல்லாமல் கண்கள் வெறித்திருக்க எதையோ பறிக்கொடுத்தவன் போல நின்று கொண்டிருந்தான் .
“ டேய் சேது “ என்றொரு குரல் அவனுக்கு வெகு அருகில் கேட்டது . கவனம் களைந்து திரும்பி பார்த்தான் . யாராக இருக்கும் ? என்னை கண்டுபிடித்துவிட்டார்களா ? ஏதும் பிரச்சினை வருமோ ? என்று எண்ணியபடி திரும்பி திரும்பி நாலா புறமும் பார்த்தான் . யாரையும் காணோம் ,யாராக இருக்கும் ? , அவனுக்குள் கொஞ்சம் டென்சன் எட்டிப்பார்த்தது .
“ டேய் சேது ... “ என்ற படி எங்கிருந்தோ திடீரென்று தன் முன்னால் வந்து நின்ற அந்த மனிதனை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை . வழுக்கை தலையோடும் ,தாடியோடும் ஒடிசலான தேகம் தாங்கி ஒரு ஒற்றை நாடி மனிதன் நின்றிருந்தான் .
“ என்ன தெரியலையா ? நா பாலா … மறந்துட்டியா ? அடையாளம் தெரியலையா … ?” .
பத்து வருடங்களுக்கு முன் அடர்த்தியான முடிக்கு சொந்தக் காரனாக மீசையில்லாமல் திரிந்தவன் , இப்போது வழுக்கை வாங்கியிருந்தான் , முகத்தில் சுருக்கம் , மனதில் தெளிவு , கண்ணில் வெளிச்சம் என்று வித்தியாசப்பட்டிருந்தான் .
சேதுவுக்கு தூக்கிவாரிப்போட்டது . ஐயோ !..இவனா ? எப்படி கண்டுபுடிச்சான் இவன் ? மறுப்புடியும் ஏதாவது பிரச்சன வருமா ? ஊற விட்டு ஓடும் போது எதிரில் வந்தவன் உடனே ஊருக்கு போட்டுகுடுத்தவன் இந்த பாவி தானே ? இப்ப என்ன செய்யப் போறானோ ? யோசனையில் இருந்தான் சேது .
“ தாடியும் கீடியுமா இருந்தாலும் ஒன்ன நா கண்டு புடிச்சிட்டேன் . பயப்படாத .. நா ஒன்ன காட்டிக் குடுக்கமாட்டன் . நீ தான் சேதுன்னு யார்கிட்டயும் சொல்லமாட்டேன் . மனுஷங்கன்னா மாறக் கூடாதா என்ன ? தப்பு செஞ்சவன் தான் செஞ்ச தப்ப திருத்திக்க சான்ஸ் கெடச்சா திருத்தக்க கூடாதா என்ன ? அங்க வீட்டாண்டையே ஒன்ன பாத்தவுடனே கண்டுபிடிச்சிட்டேன் . அங்கேயே ஒங்கிட்ட சொல்லிருப்பேன் . ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சி போயிருக்கும் . அதான் ஒன்னும் சொல்லல . எப்பிடியும் நீ இங்க பஸ்ஸ்டாண்டுக்கு வருவேன்னு நெனச்சேன் , அதான் இங்க வந்து காத்துகிட்டு இருக்கேன். "அப்படி வா " என்று ஒதுக்கு புறமாக அழைத்துக்கொண்டு போனவன் காதோரமாக அடிக்குரலில் சொன்னான் . அம்மா ! எங்க வூட்டுல தான் இருக்கு . அவுங்களுக்கு மனசு கொழம்பி போய்டிச்சி . தெருவுல திரிஞ்சிக்கிட்டு இருந்தவங்கள நாந்தான் எங்க கூட்டியாந்து வூட்ல வச்சிருக்கேன் . அடிக்கடி எங்கயாவது போய்டும் , அப்பொறம் நா தான் தேடி கண்டுபுடிச்சி கூட்டியாருவேன் . இப்ப கொஞ்ச நாளா எங்கயும் போறதில்ல , வீட்டோடவே இருக்கு .சோறு குடுத்தா சாப்பிடும் , குடுக்கலன்னா அது பாட்டுக்கு மோட்டுவளைய பாத்துகிட்டு ஒக்காந்திருக்கும் . நம்ப வூடு கொல்லையில இருக்கறதால ஊர்ல இருக்குறவங்களுக்கு இவுங்க இங்க இருக்கறது தெரியல . வா வந்து பாரு , வந்தா ஓங்க்கூட கூட்டிட்டு போ . கடைசி காலத்துல ஓங் கூடவே இருக்கட்டும் , ஒரு வேளை மனசு தெளிஞ்சா ரொம்ப சந்தோசம் . "வீட்டுக்கு வா ".. நா யார்கிட்டயும் நீ இன்னார்னு சொல்லமாட்டன், கவலைப்படாத “ .
கண்களில் நீர்கோர்த்துக்கொள்ள பாலாவை அப்படியே கட்டி பிடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதான் சேது . காலம்தான் எவ்வளவு வலிமையானது ,மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது …. மாற்றிவைக்கிறது .
“ அப்பா தான் துக்கம் தாளாமல் போய்ட்டாரு , அம்மா மனநிலை சரில்லைனாலும் உசுரோட இருக்காங்களேன்னு சந்தோஷப்படு . வா.. வா.. போவலாம் . வீட்டுக்கு நீ சந்துரு வாவே வா.. எல்லாம் சரியா போய்டும் … “ .
இன்னமும் நடப்பதை நம்பமுடியாமல், பாலாவை வியப்புடன் பார்த்துக்கொண்டு அவன் கைகளை பிடித்துக்கொண்டு நின்றான் சேது .

நம் பாரம்பரிய அரிசி வகைகள் -- மறந்து போன கதை

நம் பாரம்பரிய அரிசியின் பெருமையை அறிந்து கொள்ளுங்கள் …

கருப்பு கவுணி அரிசி --- மன்னர்கள் சாப்பிட்ட அரிசி . புற்று நோய் வராது . இன்சுலின் சுரக்கும் .

மாப்பிள்ளை சம்பா அரிசி --- நரம்பு , உடல் வலுவாகும் . ஆண்மை கூடும் .மலட்டு தன்மையை அகற்றக்கூடியது .

பூங்கார் அரிசி -- சுகப்பிரசவம் ஆகும் . தாய்ப்பால் ஊரும் . மாதவிடாய் சிக்கல் தீரும்

காட்டுயானம் அரிசி -- நீரிழிவு , மலசிக்கல் ,புற்று நோய் தீரும்

கருத்தக்கார அரிசி --- மூலம் , மலச்சிக்கல் , போன்றவை சரியாகும்

காலாநமக் அரிசி -- புத்தர் சாப்பிட்டதும் , மூளை , நரம்பு , ரத்தம் , சிறுநீரகம் சரியாகும்

மூங்கில் அரிசி -- மூட்டு வலி , முழங்கால் வலி சரியாகும்

அறுபதாம் குருவை அரிசி -- எலும்பு சரியாகும் .

இலுப்பைப்பூ சம்பா அரிசி -- பக்கவாதத்திற்கு நல்லது . கால்வலி சரியாகும்

தங்கச்சம்பா அரிசி -- பல், இதயம் வலுவாகும்

கருங்குறுவை அரிசி -- இழந்த சக்தியை மீட்டும் தரும் . கொடிய நோய்களை குணப்படுத்தும் .

கருடன் சம்பா அரிசி -- இரத்தம் , உடல் , மனம் சுத்தமாகும்

கார் அரிசி --தோல் நோய் சரியாகும்

குடை வாழை அரிசி -- குடல் சுத்தமாகும்

கிச்சிலி சம்பா அரிசி -- இரும்பு சத்து , சுண்ணாம்பு சத்து அதிகம் .

நீலம் சம்பா அரிசி -- இரத்த சோகை நீங்கும்

சீரகச் அம்பா அரிசி -- அழகு தரும் , எதிர்ப்பு சக்தி கூடும்

தூய மல்லி அரிசி -- உள் உறுப்புகள் வலுவாகும் .

குழியடிச்சான் அரிசி -- தாய்ப்பால் ஊரும்

சேலம் சன்னா அரிசி -- தசை , நரம்பு , எலும்பு வலுவாகும்

பிசினை அரிசி -- மாதவிடாய் , இடுப்பு வலி சரியாகும்

சூரக்குறுவை அரிசி -- பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்

வாளால் சம்பா அரிசி -- சுகப்பிரசவம் ஆகும் . பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும் , இடுப்பு வலுவாகும் . ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்

வாடன் சம்பா அரிசி -- அமைதியான மனம் , தூக்கம் , நல்ல உடல் நலம் ஏற்படும் .

ஆறு மனமே ஆறு

கண்ணதாசன் பாடலொன்று "ஆறு மனமே ஆறு "என்று துவங்கும் . ஆண்டவன் கட்டளை படத்த்தில் இடம் பெற்றது . இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது , கண்டிப்பாக இருக்கிறது . இந்த பாடலில் எட்டி திருக்குறளை ஒரே பாடலில் கண்ணதாசன் எழுதி உள்ளார் .

பாடலையும் , தொடர்புடைய திருகுறையும் கீழே பார்ப்போம் .

பாடல் :

ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும்
வகைக்கு தெய்வத்தின்
கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே
செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை
பொன்னாகும் வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

உண்மையை சொல்லி
நன்மையை செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் பொது பணிவு
கொண்டால் உயிர்கள்
உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

ஆசை, கோபம் களவு
கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித உருவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள
மனம் உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த
மனது ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்

மேற்கோள் காட்டப்பட்டுள்ள திருகுறள்கள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண் டனைத்து இவ்வுலகு

உணமையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிரிகள் உன்னை வணங்கும்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது

நிலைத்த திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் .

கண்ணதாசன் -- தனது பாடல்களில் திருக்குறளையும் எளிய முறையில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவு . இறைவன் தமிழ் மொழிக்கு அளித்த ஈடிணையில்லாக் கவிஞன் .

எதிரும் புதிரும்

இரவு என்பது …

இனிமையின் மாரு பெயர்
அமைதி என்று
அகராதி கூறுது
வாழ்க்கையின் பாதி
தூங்கி கழிக்குது
மனித சாதி …

பகல் என்பது ..

இரைச்சல்களின் பிறப்பிடம்
அமைதியை அழித்து
புழுதியை அணிந்து
நகரும் மணித்துளிகள் ..
இரண்டையும் இரசிக்க
தெரியாத மனித பதர்கள்..