2.28.2012

நாக்கு..! நாக்கு ..!!

நீருக்குள் ஜலசமாதி !
நினைத்த உடனே ,
வெளியில் வரும்
உடலின் பாதி !!
எலும்பிலா ஜாதி !!!
எளிதில் உணர்ச்சி
வயப்படும் வியாதி !!!!

வாயில் வசிக்கும் ,
உமிழ் நீரில் இருக்கும் ,
பிறர் உணர்வை
பல சமயம் சிதைக்கும் !
சொல்லம்பு தொடுக்கும்
ஐம்புலன்களில் ஒன்று !!

பற்கள் காவலிருக்க - சுவை
முட்கள் மேலிருக்க ,
சொற்களை அள்ளிதெளிக்கும்,
உணவை அரைக்க உதவிநிற்கும்
திணவு முதலை !

பற்களுக்கு வெளியே வந்து
கொட்டும் குளவி !
இதை எப்படி கட்டுபடுத்துவது?
இதுதான் மனிதனின் கவலை !
கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்
இது கனவிலும் கவிதை !!

தடுப்பணை தகர்ந்தால் - இது
உணர்வுள்ள விதவை !
ஊழிசெய்ய காத்திருக்கும்
உயருள்ள மிதவை !!

காவலிருக்கும் பற்களை
கடைக்கண்ணால் ஏமாற்றிவிட்டு ,
இரத்தமின்றி சத்தமின்றி
காயப்படுத்தும் வித்தை கொண்ட
உடலின் உணர்வு அணிகலன் !

இயற்க்கை தந்த சாதனம் !
இனிய தமிழ் பேசிடும் !!
உறைக்குள்ளே புகலிடம் !!!
உண்மையில் இருட்டறையில்
என்றும் உறைவிடம் !

கண்ணிலும் நீர், நாவிலும் நீர்
இரண்டுமே சக்தி வாய்ந்தது !
கண்ணைவிட்டு நீர் வெளியே
நீரை விட்டு நா வெளியே !!
விளைவு ! விபத்துதான் !!!

கண்ணீர் உவர்ப்புத்தான் !
உமிழ் நீர் செரிப்புக்குத்தான் !!
தவறாக பயன்படுத்தும் போது
இரு நீராலும் எஞ்சுவது
மனிதனுக்கு தவிப்புத்தான் !!!

2.15.2012

அரசியல்வாதிகள்...!

ஆற்றில் வலைவிரித்து,,
நிலவில் மீன்பிடித்து,
ஆகாயத்தில் உலரவைத்து,
சேற்றில் தீ மூட்டி,
நாற்றில் சமைத்து ,
காற்றில் பரிமாறும்
கலியுக கயவர்கள்.!

வயிற்றில் தினவுற்று ,
வாயில் மடைபோல்
சொல் எனும் ஊற்றெடுத்து ,
கயிற்றில் பால்கறந்து ,
நாரில் உறையவைத்து ,
வேரில் வெண்ணை எடுத்து,
பனைவாரில் பதபடுத்தி,
தினம் யார் யாருக்கோ
விற்பனை செய்யும்
வாய்சொல் விற்பன்னர்கள்..!


கானல் நீரைத் தேக்கி ,
காகித பூ கொண்டு ,
வானில் அணை கட்டும்,
விண்மீன் களுக்கிடையே,
நெல்மணி அது கொண்டு ,
செல் வழி பாலம் ,
சொல்லின் வழி அமைக்கும்,
நல்வழியில் நடப்போரை
வானுலகம் அனுப்பிவிட்டு,
ஏதேதோ செய்து,
எப்படியும் பொருள்சேர்க்கும்
அருள் வழி மறந்த
புனித ஆத்மாக்கள் ..!

கொசுவலை உடன் சென்று ,
பசுவின் சிசு அது கொண்டு ,
எலியின் வலையில் பதுங்கி,
புலி வேட்டையாடும்
பூவுலக மாக்கள்.!

வன்மனம் கொண்டு ,
தினம் ஒரு பூவின் மணம் நாடும்,
ஏழையின் மனவலியில்
பொருள் இல்லில்
துன்ப உழலில்
குளிர் காயும்
மண்ணுலக எமன்கள்..!

2.13.2012

கருவறை ..!

இருவரின் கூட்டு முயற்சி .,
இரண்டு நிமிட இன்பம் .,
இரண்டு துளி வெண்மணி .,
பயணிப்பதோ பல மணி .,

இறுதியாய் உறை வது
சூரியன் புகா நிலவறை.,!
உண்டு உறங்க ஓர் அறை.!
சுவாசிக்க ஓர் உறை .!

சுதந்திரமாக வாழும் பாசச்சிறை .!
ஒன்பது மாதம் வசிப்பதுதான் முறை .!
அதற்க்கு மேல் வாடகை கொடுத்தாலும்
இருக்கமுடியாது என்பது பெருங்குறை .!

கடவுள் மனிதனுக்கு கொடுத்த திருவறை.!
விலைமதிப்பில்லா ஓர் அறை .!
இத்தனை சிறிய ஜான் இடம் ,
இதற்குள் உறைவது எத்தனை
பெரிய மானுடம் ..!!!